பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் * 13



நின்னை ஏத்த எனக்கு அருள்புரியாய் என்று சொல்ல வந்த அடிகளார் இரண்டு சொற்களைப் பெய்கின்றார். 'நிரந்தரமாய்' என்ற சொல்லும் 'முழுவதுமே' என்ற சொல்லும் ஆழ்ந்த பொருளுடையவை. நின்னை முழுவதுமாய் ஏத்த என்பதால், ஏத்துதலே வழியாகவும் பயனாகவும் அமையவேண்டும் என்கிறார். அதாவது ஏத்துதலாகிய வழியைக் கொண்டு இறுதியில், இரந்து எல்லாம் எமக்கே பெறலாம் என்ற எண்ணத்தோடு ஏத்துதலை மறுத்து 'முழுவதுமாக ஏத்த' என்கிறார்.

அடுத்து, நிரந்தரமாக என்ற சொல்லும் இக்கருத்தை வலியுறுத்துவதாகும். பயன்கருதி ஏத்துபவர்கள், அப்பயன் கிட்டியவுடன் ஏத்துதலை மறந்துவிடுவர். இது உலகியற்கை, அதனை மறுப்பது கருதியே 'நிரந்தரமாய்' என்றார்.

11.

முழுவதும் கண்டவனைப் படைத்தான்
முடி சாய்த்து முன்நாள்
செழுமலர் கொண்டு எங்கும் தேட
அப்பாலன் இப்பால் எம்பிரான்
கழுதொடு காட்டிடை நாடகம்
ஆடிக் கதி இலியாய்
உழுவையின் தோல் உடுத்து
உன்மத்தம் மேல்கொண்டு உழிதருமே 7

முழுவதுங் கண்டவன்-பிரமன். அவனைப்படைத்தான்-திருமால். அப்பாலன்-அப்பாற்பட்டவன்; அகப்படாதவன். கழுது - பேய். கதியிலி-எல்லாரும் அடையுமிடம் தானாதலன்றித் தனக்கோர் இடமில்லாதவன். உழுவை-புலி.

நான்முகனும் திருமாலும் தேடவும் அவர்களுக்கு அகப்படாமல் அப்பால் நின்றவன், இப்பூவுலகில் புலித் தோலை உடுத்துச் சுடுகாட்டிடைப் பேய்களோடு ஆடுபவனாகவும், உன்மத்தன்போல எங்கும் திரிபவனாகவும் உள்ளான் என்க.