பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடுவூர் துரைசாமி ஐயங்கார் ரெயினால்ட்ஸ் போன்ற ஆங்கில நாவலாசிரியர்களின் கதைகளைத் தழுவி எழுதிய தோடு நின்று விடாமல் தமிழ்நாட்டின் சமகால சமுதாயத்தைச் சித்திரிக்கும் சொந்த நாவல்கள் பலவற்றையும் எழுதியிருக்கிறார். இவருடைய சொந்த முயற்சிகளில் சிறந்தவை மேனகா, கும்பகோணம் வக்கீல் என்பவையாகும். கையில் எடுத்தால் புத்தகத்தைக் கீழே வைக்காமல் தொடர்ந்து படிக்கும் ரசனை மிகுந்த கதைகளை எழுதிய வடுவூர்துரைசாமி ஐயங்கார் பின்னர் கல்கி போன்றவர்களின் கதைகளைப் படிக்கத் தயாரான ஆயிரக்கணக்கான வாசகர்களைத் தோற்றுவித்த முன்னோடியாகவே விளங்கினார். இந்தப் பெருமையை ஆரணி குப்புசாமி முதலியாரும், ரங்கராஜூவும் பகிர்ந்து கொண்டனர்.

துரைசாமி ஐயங்காரின் மிகப் பிரசித்தமான மேனகா என்ற நாவலின் முதல் பக்கத்திலேயே ஓர் அடிக் குறிப்பு காணப்படுகிறது:

'சம்பசிவையங்கார், மேனகா என்பவை உண்மைப் பெயர்களை மறைக்கும் பொருட்டு வைக்கப்பட்ட கற்பனைப் பெயர்கள்'

என்று அந்தக் குறிப்பு விளக்குகிறது. இன்றைய நாவல்களில் வரும் 'பெயர்களும் சம்பவங்களும் கற்பனையே. உண்மை மனிதர்களையும் சம்பவங்களையும் குறிப்பிடுபவை அல்ல' என்ற சட்ட அடிப்படையில் முன்கூட்டியே விளக்கம் சொல்லிக் கொள்வது நடப்பியல் சித்திரங்களில் இன்றியமையாத நிபந்தனையாக அமைவதற்கு மாறாக, வடுவூராரின் குறிப்பு, மேனகா கதை உண்மை நிகழ்ச்சிகளின் அடிப்படையில் எழுந்த கற்பனை என்பதை உணர்த்துகிறது. மர்மங்களும் துப்பறிதலும் நிறைந்த இந்த நாவலில் வாசகர் மனதை ஈர்க்கும் சம்பவங்கள் பல கையாளப்பட்டிருக்கன்றன. உணர்ச்சிகளின் உச்ச நிலையைத் தொடும் சம்பவங்களுக்கும் குறைவில்லை. பல அல்லல்களுக் குட்படும் மேனகா, ஒரு முஸ்லிம் பெண்ணின் உதவியினால் தன் கணவனை மீண்டும் அடைவது லட்சிய கதை மாந்தர்களின் செயலின் விளைவாக அமைகிறது. தமிழ்நாட்டின் பல் வேறு நகரங்களின் சமகாலச் சூழ்நிலை 1920களில் எழுதப் பட்ட இந்த நாவலில் தத்ரூபமாக விளங்குகிறது.