பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திவான் லொடபட சிங் பகதூர்

பித்தார். அநேகமாய் எல்லாத் துறைகளிலும், அவர் தமது கவனத்தைச் செலுத்தி பழைய விஷங்களையும் பழைய ஸ்தாபனங்களையும், பழைய மனிதர்களையும் நீக்குவதிலும் மாற்றுவதிலுமே கண்ணுங் கருத்துமாயிருந்து, தர்ம சத்திரங்கள், தேவாலயங்கள் முதலிய இடங்களில் அபரிமிதமாகச் செலவிடப்பட்டு வந்த பணத் தொகைகளை சிக்கனமாகச் செலவிடத் தக்க வழிகளையும் கண்டுபிடித்து அநுபவத்திற்குக் கொண்டுவந்தார். அவரால் நன்மையடைந்த சிலர் அவரைப் புகழத் தலைப்பட்டனர். அவரால் விலக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சிப்பந்திகள் ஜீவனோபாயத்திற்கு வழியின்றித் தவித்து அவரைப் பகைத்துத் தூற்றலாயினர். அவர்களுள் நூற்றுக் கணக்கானவர்கள் சோம்பேறிகளாயும் முடுச்சுமாறிகளாகவும், திருடர்களாயும் மாறி, சமயம் பார்த்து ஊரில் கொள்ளை அடிக்கவும், திருடவும், சூதாடவும் ஆரம்பித்தனர். அதற்குமுன் தாசில்தார் ரெவினியூ இன்ஸ்பெக்டர் முதலிய உத்தியோகங்களை வகித்திருந்தவர்கள் பலரும் மேற்படி கோஷ்டியில் சேர்ந்து கொண்டனர்.

ஆனால், தாம் எத்தகைய எளிய நிலைமையில் இருந்தாலும், தமக்கு எவ்விதமான தாழ்மையும் சோதனையும் நேரிட்டாலும், தாம் தமது நற்குணத்தையும் ஒழுக்கத் தூய்மையையும் விட்டு, தீய வழியில் செல்லல் ஆகாது என்ற மனவுறுதியும் சன்மார்க்கப் பிரவர்த்தியுமுள்ள மனிதர்கள் ஆயிரத்தில் ஒருவராயினும், எந்த தேசத்திலும் எந்தக் காலத்திலும் இருப்பது சகஜம் ஆதலால், மேலே கூறப்பட்டபடி வேலையிலிருந்து விலக்கப்பட்ட தாசில் தார் ஒருவரிடம் சமயற்காரனாக இருந்த ஓர் ஏழை மனிதன் அந்தத் தாசில்தாரை விட்டு விலக நேர்ந்தது. அவனுக்கு ஒரு நோயாளி மனைவியும் ஏழு குழந்தைகளும் இருந்தனர். அவர்கள் எல்லோரையும் உண்பித்து சவரக்ஷிக்க வேண்டியதுதான விலக்க இயலாத பெருத்த பொறுப்பு அவனுக்கே வந்து சேர்ந்தது. ஆகையால், தனது அநாதரவான துர்ப்பாக்கிய நிலைமையில் தான் எவ்விதமான தொழிலைச் செய்து பொருள் தேடி அவ்வளவு பெரிய குடும்பத்தைக் காப்பாற்றுவது என்ற கவலையும் மலைப்பும் தோன்றி அவனை இரவுபகல் வதைக்கத் தொடங்கின.

19