பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திவான் லொடபட சிங் பகதூர்

எவரொருவர் தாம் ஒரு ரூபாயைப் போட்டுவிட்டதாகச் சொல்லுகிறாரோ அவரிடம் அதைக் கொடுத்துவிட வேண்டுமென்றும் அந்த சமயற்காரன் தீர்மானித்துக் கொண்டான். ஒரு வேளை அந்த மனிதர் ஒரு ரூபாய்க்கு மேற்பட்ட தொகையை இழந்திருக்கலாம் என்ற எண்ணமும் தோன்றியதாகையால், அவன் அந்த ரூபாய் கிடந்த இடத்தைச் சுற்றிலும் சிறிது தூரம் வரையில் போய் நன்றாகத் தேடி ஆராய்ச்சி செய்து பார்த்தான். வேறு பொருள் எதுவும் கிடைக்கவில்லை. ஆகவே அந்த மனிதர் இழந்தது ஒரு ரூபாய் தான் என்று அவன் தீர்மானித்துக்கொண்டு, உடனே அவ்விடத்தை விட்டு நடந்து பக்கத்திலிருந்து ஆரம்பமான தெருவிலுள்ள வீடுகள் ஒவ்வொன்றிலும் புகுந்து, தான் தீர்மானித்துக் கொண்டபடி விசாரணை செய்ய, சிலர் தாம் எந்த வஸ்துவையும் இழக்கவில்லை என்றும், சிலர் தாம் நகையை இழந்ததாகவும் கூறினார்களேயன்றி, எவரும் ஒரு ரூபாயை இழந்துவிட்டதாகக் கூறவில்லை. தான் சங்கற்பித்துக் கொண்டபடி, அவன் அன்றைய கணக்கிற்கு 50-வீடுகளில் சென்று விசாரணையைத் தீர்த்துக்கொண்டான்.

அவ்வாறு பிரயாசைப்பட்டதனாலும், நீண்ட பட்டினியாலும், அவன் சோர்வடைந்து தத்தளித்தவனாய்த் தன் வீட்டை அடைந்தான். அவ்விடத்தில் அவனது மனைவியும், குழந்தைகளும் பட்டினி கிடந்து, நெருப்பில் விழுந்த புழுக்கள்போலத் துடித்த வண்ணமிருந்த மகா சங்கடமான காட்சியைக் காணவே, அந்த சமயற்காரன் தனது சொந்தக் கஷ்டங்களை மறந்தவனாய், அவர்களது துன்பத்தைத் தான் எவ்விதம் விலக்குவது என்று மறு படியும் யோசனை செய்து பார்த்தான். தன்னிடமிருந்த ரூபாயை உபயோகித்து அவர்களைக் காப்பாற்றலாமா என்ற ஒரு நினைவு அவனது மனத்தில் தோன்றியது. ஆனாலும், அவன் ஒரே உறுதியாக, "சே! இது எவனுடைய பணமோ! இதை நான் செலவிடக் கூடாது" என்று ஒரே முடிவாகத் தீர்மானித்துக் கொண்டவனாய் இருக்க, மற்றவர்களது அவஸ்தையும் கூக்குரலும் அதிகரித்து, அவன் சகிக்கக் கூடிய வரம்பிற்கு மிஞ்சிவிடவே, அவனது மனத்தில் இன்னொரு யுக்தி தோன்றியது.

அவன் ஒரு தாசில்தாரிடம் சமயற்காரனாய் இருந்தவன் என்பது முன்னரே கூறப்பட்டதல்லவா, அந்தத் தாசில்தார் அதற்கு

23