பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திவான் லொடபட சிங் பகதூர்

அவன் எட்டணாவிற்கு விற்றான். அப்போது மாலை நேரம் வந்து விட்டது. எங்கும் இருள் சூழ்ந்து கொண்டது. மற்ற கடைகளில் விளக்கெண்ணெய் விளக்குகள் முணுக் முணுக்கென்று எரிந்து கொண்டிருந்தன. ஆனாலும், நமது சமயற்காரனிடம் அந்த விளக்கும் இல்லை. ஆதலால், அவன் அருகிலிருந்த ஒரு கடையின் வெளிச்சத்தில் ரஸ்தாவின் ஒரத்தில் தனது மிட்டாயித் தட்டை வைத்து விற்கத் தொடங்கினான். அப்போது சுமார் இருபது முப்பது மனிதர்கள் ஒரே கும்பலாக அவ்விடத்திற்கு வந்து, நமது சமயற் காரனுடைய மிட்டாயி தட்டைச் சுற்றி வளைத்துக் கொண்டனர். அவர்கள் எல்லோரும் பார்வைக்குப் பணக்காரர்கள் போலவும், கண்ணியமான மனிதர்கள் போலவும் காணப்பட்டனர். ஆனாலும், அவர்கள் ஒருவரை யொருவர் தாறுமாறாக வைது கொள்வதும், பரிகாசம் செய்து கொள்வதுமாய் இருந்தனர்.

அவ்வாறு வந்து நமது சமயற்காரனை வளைத்துக் கொண்டவர்களுள் மூன்று நான்கு மனிதர்கள் மிட்டாயித் தட்டண்டை வந்து "என்ன மிட்டாயிப்பா இது? பார்வைக்குப் புது மாதிரியாக இருக்கிறதே! வாய்க்கு எப்படி இருக்கும்?" என்றனர். உடனே சமயற்காரன் “இதற்கு மைசூர்பாகென்று பெயர்; நிரம்பவும் இனிப்பாகவும் மணமாகவும் இருக்கும். வாங்கிக் கொள்ளுங்கள்" என்றான். அதைக் கேட்ட அவர்கள் நால்வரும் கொஞ்சம் சாப்பிட்டு மாதிரி பார்த்து தலைக்கு ஒவ்வொரு துண்டி எடுத்து சரேலென்று வாயில் போட்டுக்கொண்டு “ஆகா! அமிர்தம் போல இருக்கிறதே! பேஷ்! பேஷ்! அச்சா சஹ் பாஷ்! இந்த மாதிரி மிட்டாயியை நாங்கள் பிறந்தது முதல் இதுவரையில் சாப்பிட்டதே இல்லையப்பா! அடாடா! என்ன இன்பம்! என்ன ருசி!” என்று கூறிய வண்ணம், தங்களுக்குப் பின்னாலிருந்த மற்றவர்களைப் பார்த்து "நீங்களும் சாப்பிட்டு மாதிரி பாருங்கள் இந்தத் தட்டில் இருப்பதையெல்லாம் நாமே வாங்கிக்கொண்டு பணம் கொடுத்துவிடுவோம்" என்று கூறிக்கொண்டே, தட்டிலிருந்து ஒவ்வொரு துண்டாய் எடுத்தெடுத்துப் பின்னாலிருந்த ஒவ்வொருவரிடமும் கொடுத்துக் கொடுத்து, "இந்தா, நீ சாப்பிட்டுப் பார், இந்தா, நீ சாப்பிட்டுப் பார்" என்று கூறி தானம் வழங்கினர்.

26