பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

தென்னைமரத் தீவினிலே...

கனகசபையை வரச்சொல்லி இருக்கிறேன். நம்ம காரில் நீயும் அவர்களுக்கு துணையாக சென்று எல்லா இடங்களையும் காட்டு. எனக்கு வெளியே கொஞ்சம் வேலை இருக்கிறது, இந்தா இதைப் போகுமிடங்களில் கைச் செலவிற்கோ, ஏதாவது சாமான் வாங்கவோ வைத்துக் கொள்,” என்று கூறி ஐந்து ரூபாயை அருணகிரியிடம் கொடுத்தார்.

சற்று நேரத்திற்கெல்லாம் கனகசபை கை கட்டியபடி வந்து நின்றான்.

அவரைப் பார்த்ததும், “கனகசபை நம்ம வீட்டுக்கு மெட்ராசிலிருந்து உள்நாட்டுகாரர்கள் வந்திருக்கிறார்கள். நீ இவங்கள அழைத்துக் கொண்டி கொழும்பைச் சுற்றிக் காட்டிவிடு. நாளை காலையில் ஐந்து மணிக்கு இவர்களோடு நீயும் நம் ஊருக்குப் புறப்படுகிறாய். முடிந்த அளவு இலங்கையில் உள்ள எல்லா இடங்களையும் அவர்களுக்கு புரியும்படியாக நன்றாக விளக்கிக் காட்டி விட்டு பத்திரமாக அழைத்துக் கொண்டு வந்துவிடு. இதை உன் கைச்செலவுக்கு வைத்துக் கொள்” என்று கூறி இருநூறு ரூபாயைக் கொடுத்தார் பொன்னம்பலம்.

“ஆகட்டும் ஐயா, தங்கள் உத்திரவுபடியே செய்கிறேன்” என்றார் கனகசபை பணிவுடன், மாமா உடனே தன் காரிலே வெளியே சென்று விட்டார்.