பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு



செய்யிண்ட் மேரிஸ் மண்டபத்துக்கும், திருச்சி தேவர் அரங்கத்துக்கும், தஞ்சை, மதுரை நகர்களிலே உள்ள அரங்கங்களுக்கும் வந்தார்கள்!

இந்த நாவரங்க அறிவு நாகரிகத்தை இங்கர்சால் போல தமிழ் நாட்டில், ஏன், இந்தியாவிலேயே முதன் முதல் உருவாக்கிப் பழக்கப்படுத்திய திருநாவுக்கரசராக விளங்கியவர் அறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள்தான் அவருக்கு முன்பு மேடை கட்டணம் போட்டு பேசிய மேதை எவருமே தமிழ் நாட்டில் இலர்!

திரு. நாயுடுவின் ‘நா’ அறமா!
‘நா’ கொடை , மடமா?

மேற்கண்ட நிகழ்ச்சிகளைப் போலவே, அறிவியல் விஞ்ஞானியான ஜி.டி. நாயுடு அவர்கள், அமெரிக்கா சென்று சிகாகோ நகரில் இந்திய வேதாந்த கேசரி என்று புகழ்பெற்ற நாவலர் பெருமான் விவேகானந்தரைப் போல, அமெரிக்க நாட்டு இங்கர்சால் போல, தமிழ் நாட்டு நாவரசர் அறிஞர் அண்ணாவைப் போலவே, சிகாகோ நகருக்கடுத்த செயிண்ட் லூயி நகரில், வேதாந்தம், சமையம் சமுதாயம், சமத்துவம், மாதர் சங்கம், ஆன்மிக மன்றம், தொழிலியல் அரங்கம், அறிவியல் மன்றங்கள் ஆகிய மன்றங்களில் தனது ஓய்வு நேரங்களில் சொற்பொழிவுகள் ஆற்றுவதற்குரிய கட்டணங்களை சுவைஞர்களிடம் பெற்றார் என்று எண்ணும்போது - நமது அறிவெலாம், சிந்தையெலாம் பூரிக்கின்றது அட டா வோ... என்று!

அதனால்தான், ஜி.டி. நாயுடு அவர்கள் தாம் பேசிய ஒவ்வொரு அறிவாற்றல் உரைகளுக்கும் “மன்றம் நடத்துவோரிடம் நான் கட்டணம் வாங்க மாட்டேன்” என்று மறுத்துவிட்டார். இது எத்தகைய ‘நா’வறக் கொடை பார்த்தீர்களா? ‘நா’ வறம் என்பதை விட, ‘நா’ கொடை மடம் எனலாம் அல்லவா?

செயிண்ட் லூயி பள்ளியில் நாயுடு கற்ற படிப்பின் காலம் முடிந்தது. ஜி.டி. நாயுடு அப் பள்ளி நிர்வாகத்துக்கும், பேராசிரியர்களுக்கும் தனது அன்பிற்கு அடையாளமாக, நன்றி உணர்ச்சியுடன் தமிழில் ஓர் அழகான வாழ்த்து மடலை வாசித்துக் கொடுத்தார் - பிரிவு உபசார விழாவன்று. இந்த வாழ்த்து மடல் கருத்துக்களை அமெரிக்கப் பத்திரிக்கைகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டன.