பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு



திரு. நாயுடு அவர்கள் எடுத்தப் புகைப் படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சம்பவத்தையும் கோர்வையாகக் கூறுவதற்குரிய எண்ணத்தில் எடுக்கப்பட்ட புகைப் படங்களாக உள்ளன.

உலகம் சுற்றும் நாயுடுவாக அவர் பல தடவைகள் சென்ற நேரங்களில், பல நாட்டின் முக்கிய தலைவர்களை எல்லாம் படம் பிடித்துள்ளார். குறிப்பாக, பண்டித ஜவகர்லால் நேருவையும் - அவரது துணைவியார் கமலா நேருவையும் சுவிட்சர்லாந்து நாட்டில் படமெடுத்துள்ளார்.

ஜெர்மனி சென்றிருந்த திரு. நாயுடு அவர்கள், அங்கே இட்லர், முசோலினி, கோயபல்ஸ், சுபாஷ் சந்திர போஸ், எட்டாம் எட்வர்டு மன்னர் போன்ற மேலும் பல முக்கியத் தலைவர்களை எல்லாம் புகைப்படம் எடுத்துள்ளார்.

உலகத்தைப் பல தடவை வலம் வந்த மேதை நாயுடு அவர்கள், மகாத்மா காந்தியடிகளைப் போல எளிமையான ஆடைகளிலேயே காட்சி அளித்தாரே ஒழிய, பணம்-பத்தெட்டும் செய்யும் என்ற பகட்டும், படாடோபமுமான காட்சிகளைத் தனது வாழ்க்கையில் உருவாக்கிக் கொண்ட வரல்லர்.

ஒரு நான்கு முழம் வேட்டி, ஓர் அரைக் கை சட்டை, சில நேரங்களில் முகம் துடைக்கும் தோள் துண்டு ஆகியவற்றைத் தான் அவர் அணிந்து கொள்வார். அவரை பணக்காரர், செல்வச் சீமான், கொடை வள்ளல், கோமான், கோவை கோடீஸ்வரன் என்றெல்லாம் கூறிக் கொண்டவர்கள் எதிரிலே-திரு. நாயுடு காட்சிக்கு எளியராகவே வாழ்ந்து காட்டினார்.

திரு ஜி.டி.நாயுடு வாழ்க்கைத் துணை நலம் பெயர் செல்லம்மாள் துரைசாமி நாயுடு. அவர் கிருஷ்ணம்மாள், சரோஜினி என்ற இரு மாதரசிகளின் மாதாவாக வாழ்ந்தவர்.

மற்றொரு மனைவியாரை நாயுடு மணந்து கொண்டார். அந்த இல்லத்தரசி ஈன்றெடுத்த ஒரே மகனுக்குத் தனது தந்தையார் நினைவாகக் கோபால்சாமி என்ற பெயரையே சூட்டி மகிழ்ந்தார்.