பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

நாலடியார் செய்யுளும் செய்திகளும்



வெறி ஆடும் களத்திற்குச் செம்மறி ஆட்டை அந்த நெறி கெட்ட பூசாரி, கயிறு கட்டி இழுத்துச் செல்கிறான். கையில் பசுந்தழை காட்டி, அதன் பசியை மூட்டி விடுகிறான். பூசாரியை ஆடு நம்புகிறது; எதுவும் சிந்தியாமல் அவன் பின் செல்கிறது. வாலிபப் பிள்ளைகள்! இவர்களுக்கு யார் என்ன சொல்ல முடியும்? மயக்கம்! அவர்கள் காட்டுவது இல்லை தயக்கம்; விரும்புகின்றனர் மகளிர் முயக்கம்; அவர்கள் கதை? முடிவு? நாம் ஏன் சொல்வோம் அதனை மயக்குகிறாள் ஒரு மாது; அழகிறான் இந்தச் சாது; இது இவன் வாழ்க்கைக்கு ஒவ்வாது.

‘வேல் கண்ணள் இவள்’ என்று கருதி, அவள் பின் செல்கிறான்; அவள் ஒரு காலத்தில் கோல் கண்ணள் ஆவது உறுதி; கோல் ஊன்றி நடக்கப் போவது இறுதி; இஃது அவனுக்கு மறதி.

இவனும் கிழம்; முதிர்ந்துவிட்ட பழம்.

“ஏன்யா? எப்படி இருக்கிறாய்? பல் என்ன செய்கிறது?”

“பல்லவி பாடுகிறு!”

“சோறா கஞ்சியா ரொட்டியா?”

“வெறும் இட்டலிதான்”

“எழுபதா எண்பதா? இது வயதைப் பற்றியது.”

இப்படிக் கேட்ட காலம் பழைய காலம். இப்பொழுது சர்க்கரை, கொழுப்பு, இரத்தக் கொதிப்பு இவற்றிற்கு இப்பொழுது எடைகள், அறிவிப்புக் கருவிகள் திசை காட்டுகின்றன.