பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3

முன்னுரை

“மனக் கோட்டம் தீர்ப்பது நூல்” என்று கூறுவார் நன்னூல் ஆசிரியர்.

அதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது இந் நாலடியார்.

நான்கு அடிகள் கொண்ட பாவால் அமைந்தது என்பதால் இப்பெயர் பெற்றது இந்நூல்.

“செல்வம், இளமை, யாக்கை இவற்றின் நிலையாமையை எடுத்துக் கூறிச் சுகபோக வாழ்வில் திளைக்காதீர்; நல்லதோர் வீணை அதனை நலம்பெற வாழப் பயன்படுத்துங்கள்” என்று அறிவிக்கிறது.

“ஈதல் இசைபட வாழ்தல்” இதுவே வாழ்க்கையின் குறிக்கோள் என்று கண்டவர் தமிழர்கள்.

தான் உண்டு தம் மனைவி மக்கள் உண்டு என்ற சிறிய வட்டத்துள் வாழாதீர்; மானுடத்தை நேசியுங்கள் என்று கூறுகிறது இந்நூல்.

அருள் உள்ளம் பெறுவதற்குத் துறவு மனநிலை அடிப்படை என்று வற்புறுத்துகிறது. பந்த பாசங்களினின்று விடுபட்டுப் பற்றற்ற நிலை அமைந்தால்தான் மனம் மாசு நீங்கி வாழமுடியும் என்பதையும் அறிவுறுத்துகிறது.

“பசிதீர்த்தல்” இதுவே செய்யத்தக்கது என்று அறிவுறுத்துகிறது.

“தனி உடைமை” இதை ஒட்டித்தான் சமுதாயம் இயங்குகிறது.