பக்கம்:நூறாசிரியம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2எண்கூர்வாளி


உலகத் தீரே! உலகத் தீரே!
அலகில் பிறக்கத்துப் பல்லுயிருள்ளும்
உள்ளஞ் சான்ற உலகத் தீரே!
நாம்வேட்டுப் பிறந்தன்றிலமே; பின்றலை
நாம்வேட் டிறந்தன்று மிலமே ஊங்கு 5
வாழ்தல் ஞான்றும் வைகறை யுவப்போர்
மாலை யழுங்கலும் மாறுகொல் அன்றே;
புள்ளும் மாவும் எள்ளுவ மாயினும்
அவையினும் ஒம்புதல் இலமே! அலமர
வைகலுந் தினையும் உய்யலு மிலமே! 10
என்கொல் இலக்குதும் வாழ்வே; இலக்கத்து
என்கொல் ஒளிர்ந்ததும் அறிவே! வானோக்கி
எண்கூர் வாளி எய்பின் அன்ன
வறிதா கின்றே வாழ்க்கை;
அரிதா மாறே அழிவறிந் துயினே! 15


பொழிப்பு:

உலகத்தவரே! உலகத்தவரே! அளவற்ற பிறப்பாகிய பல்லாயிரங் கோடி உயிரினங்களுக்குள்ளே, எண்ணுதல், தெளிதல், தேர்தல் ஆகிய முத்திறனும் நிறைவாக, மேம்பட்டு நிற்கும் உள்ளம் பொருந்திய உலகத்தவரே!

நாம் இப்பிறப்பு வேண்டி அழுந்தி விரும்பிப் பிறந்தோம் அல்லோம்; அதுபோன்றே இப்பிறப்பின் எல்லையிலும் நாம் அழுந்தி விரும்பி இவ்வுலக வாழ்வினைத்துறப்போம் அல்லோம்; இவ்விடைப்பட்ட காலத்து நமக்கு அமைந்த இவ் வாழ்க்கைப் பொழுதிலும், நாள் தொடக்கமாகிய இருள் நீங்கா முன்காலையில், வரும் பொழுதை எண்ணி அவாவி உள்ளங்களிப்பார், நாள் முடிவாகிய இருள்படி பின் பொழுதில், கடந்த அந்நாளைய நிகழ்வுகளை எண்ணி மிக வருந்துதலாகிய தொடர்ந்த போக்கிற்கு மாறுபாடு உறுவது இல்லை ஆக-

அப் படித்ததாய வாழ்வென் பொழுதிலும் பொந்தில் அடங்குவன வாகிய பறவையினங்களையும், புழையுள் ஒடுங்குவனவாகிய விலங்கினங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/33&oldid=1221600" இலிருந்து மீள்விக்கப்பட்டது