பக்கம்:நூறாசிரியம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

13


பொழிப்பு:

பருக்கைக் கற்கள் மேல் அளாவிப் பரந்தும், பெருமணலை அரித்து வாரியும், கதுமெனப் பாய்ந்து அலைதலின் துரையினை மிகுவாகத் தோற்றியும், நிலத்தின் உட்டுளை புகுந்தும், அடிக்கண் விரைவு படவும் மேற்கண் மென்னடையிட்டும் பாய்ந்தோடும் புதுப்புனலின் தன்மையதாம் எம் உணர்வு துளும்பும் உள்ளத்தின் ஆளுகை!

சொற்களில் இதுகாறும் புகுந்து வெளிவரா நிலைத்த எண்ணங்கள் எஞ்ஞான்றும் புறப்பாட்டிற்கு உணர்வை மூட்டுதல் செய்தவதால், திடுமென அமைதியான இராக்காலத்தே விழித்து எழவும், பாடு நிரம்பிய பகற்காலத்தே இராவிழித்த களைப்பால் துயிலவும், பலபடக் கூடுவார் முன்னிலையில் வெளிப்பாடுற உரைதரவும், அவ்வுரைப் பாட்டின் வழி, முன்னை நலஞ் செய்தாரின் வழியே செவ்விய நெறிமுறைகளை விரும்பிப் பாராட்டி ஏற்கவும் செய்வதாம் அவ்வுள்ளத்தின் ஆளுகை!

அவ்வாளுகை நிறைந்து, எம்மை, அவ்வுணர்வெனும் புதுப்புனலால் சாய்வுறும் புல் என்று கூறுவேனோ? அனல் பாய்ந்து உருக்குகின்ற மெழுகென்று கூறுவேனோ? அன்றிப், புறத்தே விரிவார்ந்து அகத்தே கவிழ்ந்த மழை நிரம்பிய முகிலால் போர்க்கப் பெற்ற கதிரென்று கூறுவேனோ?

தூய வெண்மையான மெல்லிழை சான்ற பஞ்சு போல், புறப்படுத்தும் நாவும் அகப்படுத்தும் நெஞ்சும் ஒன்றே ஆகி, நலஞ்சான்ற இனித்த நடையுடையார் தம் தன்மைக்கு மகிழ்ந்து, அவ்வாறல்லாத நடையினார் தம் புன்மைக்கு வெருண்டு, நடுங்குதல் செய்தும், முன்னையோர் கனிவான சொல்லிலும் செயலிலும் கலந்து ஒன்றாகும் எமக்குச் சிற்சிலகால் வயப்பட்டு நிற்காத தன்மையை உரைக்க மாட்டுவனோ? எம்மைத் தம் வயப்படுத்தும் விருப்பினை உரைக்க மாட்டுவனோ?

எம் இயல்பான வினைவழிப் பொருள் வந்து சேரின், அதனைப் புறத்தார்க்கும் வாரி இறைத்துத் தீர்த்தும், எம் அறிவினை உண்கின்ற வரிசைப்பட்ட வறுமையினால், எம் உளத்தைக் கொளுத்தும் படி உகுக்கின்ற கண்ணீர் நிரம்பிய எம் போக்கிற்கு இயைந்த மனையாட்டியின் மேல் தீப்போலும் உரையை வீசியும், இவ்வுலகியல் மாந்தர் தாம் புறத்தே ஆரவாரிக்கும் புல்லிய வாழ்க்கையைப் பழித்தும், அகவாழ்க்கைக்கு எம்மை அடிமைப்படுத்தும் எண்ண மூட்டங்களால் உள்ளடங்கிக் கிடக்கும் எம் முதுமை சாரா இள நெஞ்சினது ஆட்டத்தே அழுந்திக் கிடப்பதான இன்பத்தை எடுத்து விளக்க முற்பட முற்பட நாவும் நாடுதல் இயலாதாகின்றது.

விரிப்பு:

பரல் - பருக்கைக் கற்கள்; பரந்து - அளாவிப் பரந்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/39&oldid=1221114" இலிருந்து மீள்விக்கப்பட்டது