பக்கம்:நூறாசிரியம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

21


ஒர் உயிர் ஒரே உயிர். உடலோடு ஒன்றினை என்று கூறாது உயிரோடு ஒன்றினை என்று கூறினான் என்க. நினைவிற்கு ஆய ஓர் உயிர் என்றது என் எல்லாவகை நினைவுகளுக்கும் பொருந்தி நிற்கும் ஒரே உயிர் என்பான் வேண்டி.

தனக்கு அவள் உயிராக நின்றனள் என்பதால், இனி அவளில்லாமல் தான் வாழ்தற்கியலாத உடல் போன்றவன் என்னும் குறிப்புக் காட்டினான் என்றவாறு,

யானே! இளநகை கேட்டி! - இது காறும் தன் ஊர் பற்றியும்; தன் உறவு பற்றியும், தன் பெற்றாளாகிய தாய் பற்றியும், தனக்குற்றாளாகிய தன் காதலி பற்றியும், உரைத்து வந்த அவன், இனித் தன்னைப் பற்றிச் சொல்லத் தொடங்கினான் என்றபடி,

இவ்வாறு இறைச்சிப் பொருளால் தன் ஊர், உறவு தாய், காதலி முதலியோர் பற்றிக் கூறிய அவ்வளவையும் கூறக்கேட்ட அவள், அவன் தன்னைப்பற்றிக் கூற வருங்கால், அதனை மிகு விருப்போடும் வியப்போடும் கேட்கும் முகத்தினளாய் இளநகை புரிந்தாள் ஆகையால் அவளை இளநகை என்று விளிக்க வேண்டுவதாயிற்று.

இவ்வளவும் கூறியவன், தன்னைப்பற்றி இறுதியாகக் கூறும் முடிவுபற்றி அவள் அறிந்து கொள்ளும் விருப்பக் குறிப்பை, அவள் எதிர்நோக்கியிருந் தாமையாலேயே அவளுக்கு நகை பிறந்தது என்க. அவ்வாறு பிறந்த நகை முற்றும் வெளிப்படின் அஃதவள் பெண்மைக்கும் நாணத்திற்கும் இழுக்காய் அமையும் என்றதால், அவள் விருப்பக் குறிப்பை இளநகையாக வெளிப்படுத்தினாள் என்க.

கேட்டி-கேட்பாயாக இதுவரை நான் சொல்லியதை அரைகுறையாகக் கேட்டிருப்பினும், இனிமேல் சொல்லப்போவதையே அவள் முழுக் கவனத்தோடு கேட்க வேண்டும் என்பதால் கேட்டி என்று கூறினான் என்க.

கூன் பிறை நுதல்-வளைந்த பிறைபோலும் நெற்றி

யானே-சாந்தணிவோனே - நின் வளைந்த பிறை போலும் நெற்றியில் செஞ்சாந்து அணிதற்கு உரியவன் யானே.

யான் நின்னை மணத்தற்கு உரியவனே என்றான் என்க. யானே என்றது உறுதிப்பாட்டிற்கு இப்பாட்டு, குறிஞ்சி யென் திணையும், இயற்கைப் புணர்ச்சிக் காலத்து தலைவன் தலைவியைத் தெருட்டிக்கூறி உயிரென்றுரைத்த துறையுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/47&oldid=1221637" இலிருந்து மீள்விக்கப்பட்டது