பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37

தன் கடமையைச் சரிவரச் செய்யாத ஒருவனோ, ஒர் அறிவற்ற முட்டாளோ பார்ப்பானாயின் இந்த ஆடை அவன் கண்ணுக்குத் தெரியாது. கண்ணால் பார்த்தவர்களோ அதன் அழகையும், திறத்தையும், நிறத்தையும் வியந்து பாராட்டிக் கொண்டேயிருப்பார்கள்.

‘அரசே இப்படிப்பட்ட ஆடையொன்று தங்களுக்குத் தேவையா; அப்படியானால் எங்களுக்குக் கட்டளை யிடுங்கள்’ என்று அவர்கள் கேட்டார்கள்.

"விந்தையான அந்த ஆடையைப்பற்றி நீங்கள் சொல்லும்போதே என் சிந்தையைக் கவர்கின்றதே! நிச்சயமாக நான் அந்த ஆடையை அணிந்து கொள்ளவிரும்புகிறேன்.

"கலைஞர்களே, உங்கள் கூட்டு முயற்சியால் உருவாகும் ஆடையை அணிந்து கொண்டு நான் நகர்வலம் வர விரும்புகிறேன். உங்களுக்கு எத்தனை பொன் வேண்டுமோ வாங்கிக் கொள்ளுங்கள். நாளைக்கே வேலையைத் தொடங்குங்கள். ஒரு வாரத்தில் உங்கள் ஆடையை எதிர்பார்க்கிறேன்” என்றான் கோலபுரி அரசன் வண்ணங்கி.