பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்

9

என்ற அடிப்படை நியாய உரிமைகளையும் கூடப் பறித்துவிடக் காரணமாக அமைந்துவிட்டன.

ஒரு மனிதரின் அடிப்படை உரிமை என்று நோக்குங்கால், அவர் உழைக்கவும், உண்டு உறங்கி வாழவும், கல்வி கற்று அதன் வாயிலாக எல்லா வகைகளிலும் தன்னை மேன்மையாக, செம்மைப்படுத்திக் கொண்டு முழு அளவில் முன்னேற்றம் பெறவும், பொருள் சார்ந்தும், எல்லாச் சலுகைகளையும் பெற உரிமையுள்ளவராகிறார். பெண்ணுக்கே உரிய கடமையாக இயற்கை அவளிடம் தாய்மைப் பொறுப்பை அளித்திருக்கிறது. இதையும் அவள் ஏற்று உரிய காலத்தில் இப்பொறுப்பை, தனக்குரிய விருப்பத்துக்கேற்ப நிறைவேற்றத் தேவையான வசதிகள், மற்றும் சலுகைகளைப் பெறவும் உரிமையுள்ளவளாக இருக்கிறாள்.

ஆனால், இத்தகைய உரிமைகள் மகளிருக்கு முழுமையாக எந்தக் காலத்திலும் அளிக்கப்பட்டிருக்கவில்லை என்பதை வருத்தத்துடன் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். ஏன், அளிக்கப்பட வேண்டும்? எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே என்றால், அந்த நிலையிலும் மகளிர் இல்லை.

ஒரு மகவைப் பெறும் தாய், தனது பெயர் முத்திரையை அந்தக் குழந்தைக்கு அளிக்கும் முறை பழைய காலத்தில் இருந்திருப்பதை அறிகிறோம். மக்கள் தாய்வழி அறியப்பட்டார்கள். ஆனால் நாடோடி மக்கள் ஓரிடத்தில் தங்கி, நிலத்தை உடமையாக்கிக் கொண்டு, அரசு, அரசுரிமை என்ற நாகரிகங்களைப் பெற்ற பின், இனப்பெருக்கத்துக்கும், வளர்ச்சிக்கும் பெண் ஒரு கருவி என்ற நிலைக்குத் தாழ்ந்தாக வேண்டி வந்தது.