பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்

15

என்பது சமூக இயலில் ஒரு முக்கியமான பிரிவாகவே இயங்குகிறது.

சுதந்தரம் பெற்ற நாள் முதலாக வயது வந்தோர் அனைவரும் வாக்குறுதி பெற்று அரசைத் தேர்ந்தெடுக்கும் உரிமைகளைப் பெற்றபின், தூலமான இந்தக் குடியரசு அமைப்பில், உயர்நிலை மாளிகைவாழ் மக்களும், அடித்தள ஆண்டியும் ஒரே மாதிரியான உரிமைகளைப் பெற்றிருப்பதாகவே கருதப்படுகிறது. நாகரிகமடைந்த மேலை நாடுகளில் கூடப் பெண்களுக்கு வாக்குரிமை இல்லாத நிலை உண்டு. ஆனால், இங்கே ஒரே கோட்டில் இந்தச் சமத்துவம் வந்துவிட்டது. எனினும் பெண் இன்னமும் பழைய பிரச்னைகளை முற்றிலும் வெற்றி கொள்ளவில்லை; புதிய பிரச்னைகளையும் தீர்த்துக் கொள்ள முடியவில்லை. அத்துடன் தனது கூட்டுக்குள்ளிருந்து தூலமாக வெளியே வந்து புதிய அறைகூவல்களை எதிர்நோக்கும்போது மனஅளவில் விடுபடாத நிலையிலேயே பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கிறாள்.

பாரத நாட்டின் பல கோடி மக்களில் இன்று பொருளாதாரம் சார்ந்து வாழ்க்கைத் தேவைகளைக்கூடப் பெற இயலாத அடித்தளப் பிரிவில் பாதிக்கு மேற்பட்ட சதவிகிதத்தினர் நெருங்குகின்றனர். கல்வி மற்றும் சமுதாயம் சார்ந்த நாகரிகப் பிரக்ஞை செம்மைப்படாமல் அந்தப் பழைய அடிமைப்படுத்தும் கோட்பாட்டிலேயே பெண்களை நிலைநிறுத்தும் மனப்பாங்கு மேல்தளத்திலும் கீழ்நிலையிலும் அகன்றிருக்கவில்லை. வரதட்சணை போன்ற அவலங்கள் அகலவில்லை; மாறாக, பல்வேறு பரிமாணங்களில் கோரங்களைக் காட்டிக் கொண்டிருக்கிறது.