பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

புதியதோர் உலகு செய்வோம்

மேற்படியில் உள்ள பெண்கள், தங்கள் சுயநலங்களே, உரிமைகள் எனக் கருதுவது பரிதாபத்துக்குரியது. அவர்களுக்குச் சமுதாயக் கடமைகள் உண்டு.

நாம் கல்வி பெறவும், இந்த முன்னேற்றத்தை அடையவும் நமது மூத்த தலைமுறைப் பெண்கள் எத்துணை போராடியிருக்கின்றனர் என்பதை மறக்க இயலாது. நாம் சமுதாயத்தில் இன்று பெற்றிருக்கும் சலுகைகள் அனைத்தும், ஏனைய பெண்களும் பெற வேண்டும்; அதற்காக நாம் கடமைப்பட்டுள்ளோம் என்பதை மறக்கலாகாது. இன்னும் நாம் பல காதம் கடக்க வேண்டும்.

இந்நாள் வசதியற்றோர், முதியோர், ஊனமுற்றோர், கைம்பெண்கள் என்று அரசு கருணைக்கரம் கொண்டு படியளக்கிறது. மனைவியை இழந்த ஆண் நலிந்தவனாகக் கருதப்படுவதில்லை. ஆனால் பெண் மட்டும் துணையை இழந்தால், சகல வகைகளிலும் ஊனமானவளாகக் கருதப்படும் நிலை ஏன்? எனவே, மகளிர் புறச்சலுகைகள் வெறும் ஊன்றுகோல் என்பதை உணர்ந்து அகத்தின் தாழ்மையுணர்வைப் போக்கிக் கொள்ள நிமிர வேண்டும்.

பெண்கள் எல்லா நிலைகளிலும் ஒருங்கிணைந்த உணர்வுடன் செயல்படும்போது, தங்களைப் பிணிக்கும் தடைகளை உண்மையாக அடையாளம் கண்டு கொள்வர். அப்போது, தாம் இரண்டாந்தரப் பிறவியல்ல என்ற விழிப்புணர்வு பெற முடியும். சமுதாயத்தில் சரிபாதி எண்ணிக்கையினர் என்பது மட்டுமின்றி ஆக்க சக்திக்கே உறைவிடமாகத் திகழுபவர் பெண்கள்.

எனவே குடும்ப உறவுகளும் சமூக உறவுகளும் அவர்களுக்குள் ஆக்கபூர்வமான அடிப்படை அறிவு