பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2. ஏழு அறங்கள்

காந்தியடிகள் ஏழுவகை அறங்களை நல்லதொரு மக்கள் சமுதாயம் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர் கூடாது என்று மொழிந்த குற்றங்கள் -

1. கொள்கையில்லாத அரசியல், 2. பக்தியில்லாத இறைவழிபாடு, 3. ஒழுக்கமில்லாத கல்வி, 4. நாணயம் இல்லாத வாணிபம், 5. மனிதநேயம் இல்லாத அறிவியல் வளர்ச்சி, 6. உழைப்பில்லாத செல்வம், 7. மனச்சாட்சிக்கு ஒப்புதலில்லாத இன்பம்.

இந்த ஏழு குற்றங்களில் ஒன்று இருந்தாலும் சமுதாயமாகிய மரத்தில் பூச்சிகள் அப்பி, பலன் கொடுக்கும் உயிர்த்தன்மையை உறிஞ்சிவிடும். இந்நாள் நாம் அரசியல் விடுதலை பெற்று அரை நூற்றாண்டுக்கு மேலாகிவிட்ட நிலையில், புதிய நூற்றாண்டின் தலைவாயிலில் நிற்கிறோம். மேற்குறிப்பிட்ட ஏழு குற்றங்களையும் உட்கொண்டு திணறும் மக்களாட்சியில் தத்தளிக்கிறோம்.

கத்தியின்றி, இரத்தமின்றி, அஹிம்சை, சத்தியம், தியாகம் என்ற வேள்வியில் காந்தியடிகள் இந்திய மக்களை ஈடுபடச் செய்தார். இருநூறு ஆண்டுக்காலம் நம்மை ஆட்சி செய்த அந்நிய நாட்டவரிடம் இருந்து பகைமை இல்லாத நட்புறவுடனேயே நாம் விடுதலை எய்தினோம்.

ஆனால், சோதரராக வாழ்ந்த வாழ்வில் குத்தப்பட்டு இரத்த வெள்ளம் பெருக்கெடுக்க, முழுமையாக இருந்த ஒரு நாட்டு சமுதாயமும் நாடும் பிளவுபட்டது. அண்ணல் அன்றே இந்த நாட்டின் மாசற்ற எதிர்காலத்தின் மீது அவநம்பிக்கையை வெளியிட்டுவிட்டார் எனலாம்.