பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

புதியதோர் உலகு செய்வோம்

கவிஞருக்கும் கலைஞருக்கும் தன்மானம் உண்டு. முடிமன்னரானாலும் உண்மைக்குப்புறமாக எழுதுகோலை வளைக்கமாட்டார். இந்நாட்களில், எழுது கோல்கள், அவற்றின் உரிமையாளரை, சமுதாயத்தோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளும் மனோபாவத்திலிருந்து பிரித்து, ‘தான்’ என்ற உயர்கொம்பில் ஏற்றி வைப்பது ஒன்றே குறியாக, அகமும் புறமும் ஒன்றாத வெறும் தந்திர வித்தைகளுக்கு இரையாகின்றன.

இந்நாள் மண், நீர், காற்று, ஆகாயம், வெற்றிடம் என்று ஐம்புலன்களும் மாசுபடுகின்றன. பெண் கருக்கள் மனித இனத்தில் அழிக்கப் பெறுகின்றன.

வரும் நூற்றாண்டில் இந்தத் தீமைகளுக்கான வேர்களைக் கெல்லி எறிவதே எம் கடமையாக இருக்கிறது. எழுதுகோல்களைப் பிடிப்பவர்கள், புனைகதையோ, காவியமோ, கவிதையோ, வானொலி நிகழ்ச்சியோ, திரைக் காட்சிக்கான சித்திரங்களோ எதுவாயினும், நழுவி விழும் ஆதார சுருதியைச் செம்மையாக்கிக் கொள்ள வேண்டும். மானுடத்தைக் கீழ் முகமாக்கும், பூமியைச் சீர்குலைக்கும், காற்றை மாசுபடுத்தி, வெற்றிடத்தைக் கரும்புகையாக்கும் அழுக்கை உமிழமாட்டோம் என்று உறுதி கொள்வோம்.

- புத்தாயிரம் கருத்தரங்கு
சென்னை.