பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்

47

நிலைபெறும் சர்வாதிக்காரக் கூறுகளுடன்தான் நிலைக்க முடிந்திருக்கிறது.

எந்த நிலையிலும், ஓர் ஆணினால், ஒரு பெண் சமமாகவோ, விஞ்சியோ அதிகாரம் பெறுவதைப் பொறுக்க முடிவதில்லை. நல்ல நீரினுள், அசுத்தங்கள் கலக்கும்போது கொப்புளங்கள் தோன்றுவதுபோல், கண்ணியத்துக்கும் நேர்மைக்கும் எடுத்துக்காட்டாகச் சொல்லப்படுபவர் நாவிலிருந்தும்கூட, கூட்டமாக இருக்கும்போதோ மோதல்கள் நேரும்போதோ பெண்ணைக் குறிக்கும் இழிவான வகைச் சொற்கள் தெறித்து விழுகின்றன. பெண் மீதான வன்முறைகள், பொதுவான பெண் முன்னேற்ற வளர்ச்சியை ஏற்க முடியாத ஆதிக்க சமுதாயத்தின் வெளிப்பாடுகள் என்று கொள்ள வேண்டி இருக்கிறது.

இந்நாட்களில், எல்லாத் தளங்களிலும் வன்முறைகள் கட்டவிழ்வதும், பொதுச் சொத்துகளும், உயிர்களும் கோரமாக அழிக்கப்படுவதும் அன்றாட நிகழ்ச்சிகளாக இருக்கின்றன. ஆக்கத்துக்கான பயன்பாடுகளை விளைவிக்கக்கூடிய உத்தரவாதம் இன்றைய ஆட்சித் தலைமைகளில் இல்லை.

ஆனால் இன்றைய இந்திய சமுதாயம் வன்முறைகளில் இருந்தும் ஆதிக்கப் போட்டிகளின் விளைவான பகையுணர்வுகளில் ஏற்படும் அழிவுகளில் இருந்தும் மீள வேண்டுமானால், பெண்களின் சுயமான உணர்வுகளின் வெளிப்பாடுகளில் குவியும் ஆற்றல் அவசியமாகிறது. இது பழிக்குப் பழி வாங்கும் அழிவாற்றல் அல்ல.

இந்நாள் நம் சமுதாயத்தைப் பிடித்து ஆட்டும் அவலங்களில் ஒன்று மதவெறி மற்றது சாதி வெறி.