பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

புதியதோர் உலகு செய்வோம்

‘மதநல்லிணக்கம்’ என்ற கருத்தைத் தலைவர்கள் முன் வைக்கும்போது, “எல்லா மதங்களும் அன்பையே போதிக்கின்றன. உன்னைவிட அயலானை நேசி என்றே சொல்கின்றன. பிறருக்குத் துன்பம் விளைவித்து உன் மதத்தின் ஆதிக்கத்தைப் பெருக்க வேண்டும் என்று கூறவில்லை” என்று விளக்கம் தருகின்றனர். உண்மை அதுவாக இருக்கலாம்.

ஆனால், பெண் என்று வரும்போது எந்த ஒரு மதமும் அவளுக்குச் சம மனித உரிமை அளித்திருக்கவில்லை என்பதே தெளிவு.

தன்னுடைய கொல்லும் வில்லாலும், ஏகாதிபத்தியத்துக்கான வேள்வியினாலும் முதன்மை பெறும் நாயகன் அறிந்து பூரண கர்ப்பிணியான மனைவியைக் கானகத்துக்கு அனுப்பி வைத்தான். அவளை மண்ணுக்குள் அனுப்பும் வரை, அவளிடம் புதல்வர்கள் தன்னுடையவர்கள்தாம் என்பதற்கு சான்று கேட்டான். அவள் மண்ணுக்குள் மறைந்த பின்னரே, ஐயம் தெளிந்து மக்களை ஏற்றான். இந்த நாயக தெய்வம் அடையாளமாகிப் போன சமய அடையாளம் பெண்ணுக்குத் தேவையா? முகத்திரை இடவில்லை என்றால் அக்கினித் திராவகம் என்ற சமய அடையாளம் பெண்ணுகுக்குத் தேவையா? பெண்ணே பாவம் செய்யத் தூண்டுபவள் என்று முத்திரையிடும் சமய அடையாளம் பெண்ணுக்குத் தேவையா? சமயம் கற்பிக்கும் வருண பேத சாதிப் பிரிவுகளின் பெண் வருக்கம் தன்னை குதறிக் கொள்வது தேவையா? ஆதிப் பெண்ணின் பூப்புக்குருதி, ஆதி மனிதனுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால், பெண், மனிதனின் பரிணாம வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்தின் நெருக்கடிகளையும் துன்பங்களையும் சுமைகளையும் அநுபவித்தவள்.