பக்கம்:மகான் குரு நானக்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

மகான் குருநானக்



அதற்கு குருநானக், 'எனது ஏழை நண்பர் தச்சர் பாய்லாலு வீட்டில்தான் விருந்துண்ணப் போகிறேன். அது மட்டுமன்று, ஆளுநர் நடத்தும் விருந்துக்கு நான் வர மாட்டேன்' என்று கூறி அந்த அதிகாரியை அனுப்பிவிட்டார்.

குருநானக் கூறிய பதிலைக் கேள்விப்பட்ட ஆளுநர் நானக் ஓர் இந்து நான் ஒரு முஸ்லீம், அந்த மத பேதத்தால் நானக் எனது விருந்துக்கு வர மறுத்துவிட்டாரோ என்று யோசித்தார். உடனே நானக் விருந்துண்பதற்கான தனி ஏற்பாடுகளை ஆளுநர் செய்தார். மறுபடியும் ஆளுநர் அதே அதிகாரியை நானக்கிடம் அனுப்பி விருந்துக்கு அழைத்து வருமாறு உத்தரவிட்டார்.

ஆளுநர் அனுப்பிய அதிகாரி மீண்டும் குருநானக்கிடம் வந்து, தனி விருந்துக்கு எல்லா ஏற்பாடுகளையும் ஆளுநர் செய்த விவரத்தையும் அவரிடம் விவரித்தார்.

'எனக்கு ஜாதி வேற்றுமை என்ற எண்ணமே கிடையாது. எங்கும் உண்பேன்; எங்கும் உறங்குவேன்; எனக்காகத் தூய்மை செய்யப்பட்ட இடமோ, தனியாகத் தயாரிக்கப்பட்ட உணவோ எதுவும் தேவையில்லை. கடவுளால் படைக்கப்பட்ட இந்த உலகத்தில் எல்லா இடங்களும் எனக்குத் தூய்மையானவைதான். ஜாதி பேதமோ, மத பேதமோ, உணவு பேதமோ, இட பேதமோ, இன பேதமோ எதுவுமே என்னைப் பொறுத்தவரை கிடையாது. ஆனால், கவர்னர் மாலிக் வீட்டில் நான் உணவு உண்ண மாட்டேன்' என்று கூறி வந்த அதிகாரியைத் திருப்பி அனுப்பி விட்டார் குருநானக்

கொந்தளித்தார் கவர்னர் குருநானக் தங்கியிருந்த ஏழை தச்சன் வீட்டுக்கு விர்ரென்று பரிவாரங்களோடு வந்திறங்கினார். வீட்டிற்குள் நுழைந்து, எனது வீட்டில் உணவுண்ண மறுத்த காரணம் என்ன? என்று நெருப்புப் பொறிகள் தெறித்தார்போல கோபமாகக் கேட்டார் ஆளுநர்.

உடனே குருநானக், ஆளுநரை நோக்கி, உண்மையை உணர விரும்புகிறீர்களா? அப்படியானால், உங்களுடைய வீட்டில் இருந்து உணவை எடுத்துவரச் சொல்லுங்கள் என்றார்.