பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
8. தமிழ் வளர்ச்சிக்கு இலக்கணப் புலவர்களின் கொடை


மற்ற மொழிகளைப் போலவே தமிழிலும் முதலில் இலக்கியங்கள் தோன்றின. பின்னர், இலக்கியம் கண்டதற்கு இலக்கண நூல்கள் தோன்றின.

ஆறு, கண்ட இடங்களில் பிய்த்துக்கொண்டு சிதறாமல் நேரிதின் செல்வதற்குக் கரைகள் துணைபுரிகின்றன. அவ்வாறே, மொழிகள் சிதையாமல் நேரிதின் இயங்குவதற்கு உதவும் கரைகளே இலக்கண நூல்கள்.

மொழிகள் சிதையாமல்-அழியாமல் வளர்வதற்குத் துணைபுரியும் காத்தல் கடவுளே இலக்கண நூல்கள்.

மொழிகளைத் தாறுமாறாகப் பயன்படுத்தாமல் இப்படி இப்படித்தான் கையாண்டு பயன்பெற வேண்டும் என்னும் சட்ட விதிகளை வகுத்துத் தந்துள்ள மொழிச் சட்ட நூல்களே இலக்கண நூல்களாகும்.

‘தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் துணைநிற்கும் இத்தகைய இலக்கண நூல்கள் பலவற்றை இலக்கண ஆசிரியர்கள் பலர் தத்தம் கொடையாக அளித்துப் போந்துள்ளனர். விரிவஞ்சி, இலக்கண நூல்களின் பெயர் களையும் அவற்றின் ஆசிரியர் பெயர்களையும் மட்டும் ஒரளவு இங்கே காணலாம்.

“நீண்ட தமிழால் உலகை கேமியின் அளந்தான்”