பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

மனத்தின் தோற்றம்



என்பன குறள்கள். திருத்தக்கதேவர் சீவக சிந்தாமணியில் நெல்பயிரைக் கொண்டு இந்தக் கருத்தைக் குறிப்பாக அறிவித்துள்ளார்:

நெல்பயிர் செல்வம் பெற்றுள்ள மேன்மையில்லாத கீழோர்போல் தொடக்கத்தில் தலை நிமிர்ந்து நின்று, பின்னர், தேர்ந்த நூல் கற்ற பெரியோர் போல் தலை தாழ்ந்து காய்த்து விளையுமாம். பாடல்:

“சொல் அரும் பசும்பாம்பின் தோற்றம்போல்
மெல்லவே கருவிருந்து ஈன்று மேலலார்
செல்வமே போல் தலைநிறுவித் தேர்ந்தநூல்
கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே” (53)

என்பது பாடல். இந்தக் கருத்தை, ஆங்கிலப் பெரும் புலவராகிய சேக்சுபியரும் தமது “As you like it” என்னும் நாடக நூலில் ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அறிவிலி தன்னை உயர்ந்த அறிவாளியாக எண்ணிக் கொண்டிருப்பானாம்; ஆனால், உண்மையான அறிஞன் தன்னை அறிவிலியாக எண்ணிக் கொண்டிருப்பானாம் - அதாவது, சிறுமை தன்னை வியந்து அணியுமாம்; பெருமையோ என்றும் பணியுமாம், பாடல்:

“I do now remember a saying,
The fool doth think he is wise,
but the wise man knows himself to be a fool” (5-1 : 29-31)

என்பது பாடல் பகுதி. ‘I do now remember a saying’ என்பது, பிரபுலிங்க லீலைப் பாடலில் உள்ள ‘அறம் சூழ்ந்தோர் உரைக்கும் உரை கண்டாம்’ என்னும் பகுதி போன்றது.

இனி, சிவப்பிரகாச அடிகளார் எதை அடிப்படையாகக் கொண்டு இக்கருத்தைக் கூறியுள்ளார் என நோக்குவாம்: