பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

மனத்தின் தோற்றம்



4.4 கொள்வோர் இல்லாக் குறை:

வனவசை என்னும் நகரத்தில் எந்தக் குறையும் இல்லையாம். அங்ஙன மிருக்கவும், அங்கேயும் ஒரு குறையிருப்பதாகப் புதிய குறை ஒன்று கண்டு பிடித்துள்ளார் சிவப்பிரகாசர். உடை, உணவு, மலர், அணிகலன், மனை முதலியவற்றால் எந்தக் குறையும் இல்லாத அந்த நகரில், கொடுப்பவருக்கு வாங்குபவர் இல்லாதகுறை ஒன்று உள்ளதாம் பாடல்:

“உடுப்போர்க்கு உடுக்கும் துகில்களால்
உண்போர்க்கு உண்ணும் பொருள்களால்
தொடுப்போர்க்கு எடுக்கும் மலர்களால்
அணிவோர்க்கு அணியும் சுடரிழையால்
அடுப்போர்க்கு அடுக்கும் மனைகளால்
குறைபா டுடைய தன்று அதுதான்
கொடுப்போர்க்கு இரப்பார் இல்லாத
குறை ஒன்றுளது கூறுங்கால்” (3.16)

கொடுப்போர்க்குக் கொள்வோர் இல்லாத குறை இருப்பதாகக் கூறியதன் வாயிலாக, அந்நகரின் மாபெரு வளத்தைப் புதிய முறையில் அறிவித்துள்ளார் அடிகளார்.

இங்கே கம்பரின் பாடல் ஒன்று நினைவிற்கு வருகிறது. கோசல நாட்டில் வறுமையே இன்மையால் கொடுக்கும் வள்ளல் செயலுக்கும், பகைவர் இன்மையால் மறத்திற்கும், பொய் இல்லாமையால் உண்மைக்கும், மக்களிடையே கேள்விச் செல்வம் மிக்கிருத்தலால் அறியாமைக்கும் இடம் இல்லையாம். இவ்விதமாக அந்நாட்டின் பெருமையைக் கூறியுள்ளார் கம்பர். பாடல்:

“வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
திண்மை இல்லை நேர்செறுகர் இன்மையால்
உண்மை இல்லை பொய்உரை இலாமையால்
ஒண்மை இல்லை பல்கேள்வி ஓங்கலான் (1-2-53)