பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

மனத்தின் தோற்றம்



மற்றும், ஒழுக்கம் தவறிய பெண்களும் அத்தீவினையைத் (பாவத்தைத்) தீர்த்துக்கொள்ள வந்து குமரியாடுதல் உண்டாம். வாரணாசி என்னும் ஊரிலிருந்த அபஞ்சிகன் என்னும் அந்தணனின் மனைவி சாலி என்பாள், ஒழுக்கம் தவறியதால் அந்தத் தீமையைப் போக்கிக் கொள்ள வந்து குமரி யாடினாளாம். இதனை,

“ஆரண உவாத்தி அபஞ்சிகன் என்போன்
பார்ப்பணி சாலி காப்புக்கடை கழிந்து
கொண்டோற் பிழைத்த தண்டம் அஞ்சித்
தென்திசைக் குமரி ஆடிய வருவோள்” (13:4-7)

என்னும் பகுதியால் அறியலாம்.

காமத்து இயற்கை

உவவனம் சென்ற மணிமேகலையை அடைவதற்காக வந்த உதய குமரன், மணிமேகலை ஆங்கிருந்த பளிங்கு அறைக்குள் புகுந்துகொண்டபின், அவளை எப்படியாவது யான் அடைவேன் எனச் சுதமதியிடம் கூறிச் சென்று விட்டான். பின்னர் வெளிவந்த மணிமேகலை சுதமதியிடம் பின்வருமாறு கூறுகிறாள்:

கற்போ-தவ உணர்வோ இல்லாதவள், இழிந்த குலத்தினள், காசுக்கு உடலை விற்கக் கூடிய வேசி என்றெல்லாம் என்னை இகழினும் என்னை விரும்பிய அந்தப் புதியவனாகிய - முன்பின் பழகாதவனாகிய உதய குமரன் பின்னே என் உள்ளம் சென்றது. சுதமதியே! இது தான் காமத்தின் இயற்கை போலும் - என்று கூறினாள்:

“கற்புத் தானிலள் கற்றவ உணர்விலள்
வருணக் காப்பிலள் பொருள் விலையாட்டி என்று
இகழ்ந்தன னாகி நயந்தோன் என்னாது
புதுவோன் பின்றைப் போனதென் நெஞ்சம்
இதுவோ அன்னாய் காமத் தியற்கை
இதுவே யாயின் கெடுக அதன்திறம்” (5:86-91)