பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

211



வழங்கிவிட்டார்கள். மர இனப் பெயர்களை முதலில் தொகுக்கலாம் என்றேன் நான். ஐயா அவர்கள் அதற்கு அன்போடு ஒப்புதல் அளித்தார்கள். எனது பணிக்கு வேண்டிய ஒரு நூலும் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் இல்லாத நிலையில், யான் புதுச்சேரியிலிருந்து நாற்பது அகர முதலிகள் கொண்டு போய் வைத்துப் பணி தொடங்கினேன். அப்போது யான் அறிந்த சுவையான செய்தி ஒன்றை இங்கே தருகிறேன்:

‘கோதுமை’ என்பதைத் தென்னாற்காடு மாவட்டப் பகுதியிலும் அதன் நடுவே உள்ள புதுச்சேரியிலும் ‘கோதும’ என்று கொச்சையாகப் பேச்சுத் தமிழில் சொல்வது வழக்கம். மூளைக்கட்டி நோயாளியாகிய யான் மருத்துவத்திற்காகச் சென்னைக்குச் செல்லும் போதெல்லாம் என் சிறிய மாமனார் வீட்டில் தங்குவது வழக்கம். அந்த வீட்டுச் சமையல்காரர் இராமநாதபுரம் மாவட்டத்தினர். அவர் கோதுமை என்பதைக் ‘கோதம்ப’ என்று கூறுவார். நான் ‘கோதம்ப’ என்பதைக் கேட்டதும் கிண்டல் பண்ணுவது வழக்கம். எங்கள் வீட்டிற்கு வந்த பிறகும், என் மனைவியை நோக்கி, இன்றைக்கு என்ன ‘கோதம்ப உப்புமாவா?’ - ‘கோதம்ப பூரியா?’ எனக் கிண்டலாகக் கேட்பது வழக்கம்.

இந்த நிலை இருக்க, யான் பல்கலைக் கழகத்தில் மர இனப் பெயர்களைத் தொகுத்துக் கொண்டிருந்த போது, கோதுமை என்பதன் வேறு பெயர்களை வேறு வேறு அகர முதலிகளில் கண்டு வியந்தேன். அவையாவன: ‘கோதும்பை’ என்னும் பெயரைச் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதியிலும், ‘கோதிமம்’ என்னும் பெயரைச் சாம்பசிவம் பிள்ளையின் தமிழ் - ஆங்கில அகராதியிலும், ‘கோதுமம்’ என்னும் பெயரை யாழ்ப்பாணத்து மானிப்பா யகராதி யிலும், கோதூமம் என்னும் பெயரைத் திருவானைக்காப் புராணத்திலும் கண்டு வியந்தேன். “நலத்தகு பொருள் கோதுமம்” என்பது, திருவானைக்காப் புராணம் - நான