பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
15. சிலம்பில் இரு குரவைகள்



சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை என இரு பெருங் குரவைக் கூத்துப் பகுதிகள் உள்ளன. குரவை என்பது, மகளிர் கைகோத்துப் பாடி ஆடும் ஒரு வகைக் கூத்து. ஆய்ச்சியர் குரவையைத் திருமாலைப் பற்றிய ஒரு சுருக்கமான காப்பியம் எனவும், குன்றக் குரவையை முருகனைப் பற்றிய ஒரு சுருக்கமான காப்பியம் எனவும் கூறும் அளவுக்கு, இரண்டும் சுருங்கக் கூறி விளங்க வைத்தல் என்னும் முறையில் சிறந்து திகழ்கின்றன. சுவையான இந்தப் பகுதிகளை எழுத ஆசிரியர் இளங்கோ அடிகள் எங்கே யாரிடம் கற்றாரோ என வியக்கத் தோன்று கிறது. இனி முறையே அவை வருமாறு:

1. ஆய்ச்சியர் குரவை

ஏழுகள்

தாம் வாழும் பகுதியில் தீய நிமித்தங்கள் பல தோன்றியதால், மாதரி, தன் மகள் ஐயையிடம், குரவைக் கூத்து ஆடினால் தீமைகள் வாரா எனக் கூறிக் குரவைக் கூத்தாட ஏற்பாடு செய்தாள். மேலும் சில கூறுவாள்:

கன்னியர் எழுவர் தலைக்கு ஒரு காளையாக ஏழு காளைகளைத் தொழுவத்தில் கட்டி வளர்த்து வந்தனர். இந்த இந்தக் காளையை அடக்குபவருக்கு இந்த இந்தக் கன்னி உரியவள் என மாதரி கூறலானாள்: