பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

227



வரலாற்றுச் சூழ்நிலைகளையும் பார்க்க வேண்டுமே! கம்பருக் கும் ஒட்டக் கூத்தருக்கும் இடையே தொடர்புக் கதைகள் பல சொல்லப்படுவதை அவ்வளவு எளிதாகப் புறக்கணித்து விட முடியாது. கம்பர் வரலாறு முழுவதையும் கூர்ந்து நோக்குங்கால், அவர், பேரரசுச் சோழர் காலத்தவராகவே தென்படுகிறார்.

ஆனால், கம்பர் ஒன்பதாம் நூற்றாண்டினர் என்னும் கொள்கையினர் சிலர், ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் (கி.பி. 871-907) அரசாண்ட ஆதித்தச் சோழன் காலத்தில் கம்பர் வாழ்ந்தார்; அதனால் அவர் ஆதித்தச் சோழனுக்கு நன்றி தெரிவிக்கும் முறையில், தம் நூலில், இராமனுடைய முன்னோர் சூரிய, குலத்தில் வந்தவர்கள் என்பதை அறிவிக்கும் இடத்தில், (1 - வரலாற்றுப் படலம் - 3).

“ஆதித்தன் குல முதல்வன் மனுவினை யார் அறியாதார்” என்று பாடி ஆதித்தன் பெயரைச் சுட்டியுள்ளார் என்று கூறுவர். ஆதித்தன் என்பதற்குச் ‘சூரியன்’ என்ற பொருள் உண்டு. கம்பர் ஆதித்தச் சோழனை நினைவு கூராமல், இயற்கையாக ‘ஆதித்தன்’ என்று கூறியிருக்கக் கூடாதா? அல்லது தம் தந்தையின் பெயராகிய ‘ஆதித்தன்’ என்பதைத் தந்தையின் நினைவாகத் தம் நூலில் பெய்திருக்கக் கூடாதா? எனவே, இது பொருத்தமான சான்று ஆகாது.

மற்றும், இக்கொள்கையினரால், கம்பர் ஒன்பதாம் நூற்றாண்டினர் என்பதற்கு அடிப்படைச் சான்றாக எடுத்துக்காட்டப் படுகின்ற,

“எண்ணிய சகாத்தம் எண்ணுற் றேழின்மேல்
சடையன் வாழ்வு
கண்ணிய வெண்ணெய் கல்லூர் தன்னிலே
கம்பு நாடன்