பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

மனத்தின் தோற்றம்



புலப்படாமற் போகாது. சில ஆண்டுகளாயினும் மாணிக்க வாசகர் சுந்தரர்க்குப் பிற்பட்டவராயிருந்ததனால்தான், சைவ நாயன்மார்களைப் பற்றிச் சுந்தரரால் பாடப்பெற்ற நூலில் மாணிக்கவாசகர் இடம் பெறவில்லை.

முதல் நூற்றாண்டிலிருந்து பன்னிரண்டாம் நூற்றாண்டு வரைக்கும், ஆராய்ச்சியாளர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக மாணிக்கவாசகரின் காலத்தை அங்குமிங்குமாகத் தூக்கிப்போட்டுப் பந்தாடினாலும், சுந்தரர் நூலில் மாணிக்கவாசகர் இடம் பெறாததைக் கொண்டும், திருவாசகப் பத்துக்களின் தலைப்புகளைக் கொண்டும், மொழி நடையைக் கொண்டும், சுந்தரர்க்குப் பிற்பட்டவரே மாணிக்கவாசகர் எனத் துணிந்து முடிவு செய்யலாம். இதற்கு இயற்கையான இன்னொரு சான்றும் உள்ளது: 'சைவ சமய குரவர் நால்வர் அல்லது நால்வர்' என்னும் தொகைப் பெயர் வரிசையில், (1) திருஞானசம்பந்தர். (2) திருநாவுக்கரசர், (3) சுந்தரர், (4) மாணிக்கவாசகர் என மாணிக்கவாசகர் நான்காம் இடத்தைப் பெற்றுள்ளமை காண்க. இவர் மற்ற மூவரினும் காலத்தால் பிற்பட்டவரா யிருந்ததனால்தான் இறுதியில் வைத்து எண்ணப்பட் டுள்ளார். மற்றபடி, பெருமையினால் நால்வரும் ஒரு நிகரானவர்களே.

இந்நால்வருள் முதல் இருவராகிய திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் ஒரே காலத்தினர் - அதாவது ஏழாம் நூற்றாண்டினர். இவ்விருவரையும் தம் நூலில் பாடியுள்ள சுந்தரர் எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டினராகத் துணியப்பட்டுள்ளார். எனவே, மாணிக்கவாசகர் ஒன்பதாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவர் எனக் கொள்ள வேண்டும். ஒன்பதாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவர் என்றால், பல நூற்றாண்டுகள் பின் தள்ளியிருக்க முடியாது; ஒரிரு நூற்றாண்டுதான் பிற்பட்டிருக்க முடியும். பல நூற்