பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

95



பின்பு வல்லி தன் உள்ளக்கருத்தைக் குறியின் வாயிலாக விள்ளச் சொன்னாள். குறவஞ்சியோ வழக்கப்படி முதலில்,

“என்ன குறி யாகிலுகான் சொல்லுவே னம்மே சதுர்
ஏறுவே னெதிர்த்தபேரை வெல்லுவே னம்மே
மன்னவர்கள் மெச்சுகுற வஞ்சிநானம்மே யென்றன்
வயிற்றுக்கித் தனைபோதுங் கஞ்சிவாரம்மே
பின்னமின்றிக் கூழெனினுங் கொண்டுவா அம்மே வந்தால்
பெரிய குடுக்கை முட்ட மண்டுவேனம்மே
தின்னஇலை யும்பிளவு மள்ளித்தா அம்மே கப்பற்
சீனச்சரக்குத் துக்கிணி கிள்ளித்தா அம்மே”

என்று கேட்டு உணவும் வெற்றிலைபாக்கு புகையிலையும் வாங்கி உட்கொண்டாள். ஈண்டு கப்பல் சீனச்சரக்கு என்றால் புகையிலை. அன்றைய தமிழனுக்கும் சீனனுக்கும் நடந்த கப்பல் வாணிகப் பெருக்கை நோக்குங்கள். துக்கிணி புகையிலை என்பது உலக வழக்கை ஒட்டி உள்ளதன்றோ?

பின்பு குறத்தி குறி சொல்லத் தொடங்குகின்றாள். “ஏ அம்மே! எல்லா நிமித்தங்களும் (சகுனங்களும்) சரியாய் உள்ளன, ஆந்தையின் அலறலும் நன்று. தும்மலுடன் காகமும் இடம் செல்லுது. மூச்சும் நல்ல பக்கமே செல்லுது. பல்லியும் பல பலென்னப் பகருது. ஆகையாலே உனக்கு நல்ல மாப்பிள்ளை வருவான் அம்மே. அவன் கழுத்திலே கறுப்பு இருக்கும் அம்மே. சரி உன் கையைக் காட்டு.

(வசந்தவல்லி கையைக் காட்டுகிறாள்)

ஒகோ நல்ல கை யம்மே! என்னைப்போன்ற நாலு பேருக்கும் அள்ளிக்கொடுக்கும் கை அம்மே சரி, உதடும் நாக்கும் துடிக்கின்றன. குறி சொல்லுகிறேன் கேள்.