2
வாசனைப் பொருட்களையும் அகிலையும் துகிலையும் பொன்னுடன் அன்பளிப்பாக அளித்ததை “புதிய ஏற்பாடு” விவரித்துள்ளது.[1] கிரேக்க நூலாசிரியரான ஹெக்டரியஸ் மிலேட்டஸ் கி மு 549-486 இந்திய நாட்டின் பல பட்டணங்களை சிறப்பாக மேற்கு கிழக்கு கடல் துறைகளை குறிப்பிட்டு இருப்பதால், அந்தக் கால கட்டத்தில் இந்தியாவிற்கும் கிரேக்கத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே நிகழ்ந்த விரிவான வணிகத்தின் தன்மையை ஊகிக்க உதவுகிறது. இதனைப் போன்று, ரோம் உள்ளிட்ட மத்யதரைக்கடல் நாடுகளுடன் தமிழகம் தொடர்பு கொண்டு இருந்ததை, கரூர், கோவை, மதுரை, அழகன்குளம் ஆகிய ஊர் அகழ்வுகளில் கிடைத்த ரோம நாணயங்கள் உறுதிப்படுத்துகின்றன. அங்ஙனமே, நமது நாட்டுப் பொருட்களும் மேற்கு நாடுகளின் ஆடம்பர வாழ்க்கைக்குப் பயன்பட்டதை கீழேகண்ட வரலாற்று நிகழ்ச்சிகள் விளக்குகின்றன.
கி.மு. 210-ல் ரோமாபுரியில் இயற்கை எய்திய சைலா என்ற மன்னனது சிதையிலும் நீரோ மன்னனது (கி.மு, 68-54) உறவினரான பாப்போயியின் ஈமச்சடங்கின் பொழுதும், கீழ் நாடுகளில் இருந்து ரோமாபுரிக்கு வரவழைக்கப்பட்ட வாசனைப்பொருட்கள் அனைத்தும் கொட்டப்பட்டு எரியூட்டப்பட்டது.[2] இந்த வாசனைப் பொருட்களுக்கு அடுத்தபடியாக ரோம நாட்டில், தமிழ்நாட்டு முத்துக்கள் இடம் பிடித்திருந்தன. பேரரசர் ஜூலியஸ் ஸீஸர் (கி.மு. 39-14) தனது நண்பரான புருட்டஸின் தாயாருக்கு, 48, 457 பவுன் பெறுமானமுள்ள நன்முத்துக்களை அன்பளிப்பாக வழங்கிய செய்தியும் உள்ளது.[3] பேரழகி கிளியோ பாத்ராவின் காதணிகளில் 1,51,457 பவுன் பெறுமான முத்துக்கள் இடம் பெற்றிருந்தனவாம்.[4] இந்த முத்துக்கள் அன்றைய தமிழகத்தில் சிறப்புற்றிருந்த பட்டினங்களில் இருந்து பெறப்பட்டவை என்பது தெளிவு. அப்பொழுது சேரநாட்டில், கொடு