3
மணம், பந்தர் என்ற கடற்றுறைகள் முத்துக்களுக்கு பெயர் பெற்றிருந்தமை,
“கொடுமனம் பட்ட வினைமா னெடுங்கலம்
பந்தர் பயந்த பலர் புகழ் முத்தம்” ... ... ... என்ற
அரசில் கிழாரது எட்டாம் பத்து, இயம்புகிறது. இன்னும், அதே நூலின் ஏழாம்பத்திலும், ஒன்பதாம் பத்திலும் இந்த ஊர்களைப் பற்றிய புகழுரைகள் பொதிந்து உள்ளன.[1]
கி.மு. ஐந்தாவது நூற்றாண்டில், பாபிலோனில் பாரசீக, மன்னன் தாரீயஸது ஆட்சியின் பொழுது, வாணிகச் சாத்தாகச் சென்ற தமிழர்கள் அங்கேயே குடியிருப்பு அமைத்து நிலைபெற்று இருந்தனர். எகிப்து நாட்டில், அம்மோன்ரா என்ற இடத்தில் உள்ள ஆலயத்தில், தமது கடற்பயணத்தை வெற்றிகரமாக முடித்த தென்னாட்டார் ஒருவர் மேற்கொண்ட வழிபாட்டு நிகழ்ச்சி அந்த நாட்டுக் கல்வெட்டு ஒன்றில் காணப்படுகிறது. அலெக்ஸாந்திரியாவிலும் தென்னாட்டார் குடியிருப்பு இருந்ததை அறிய இந்த கல்வெட்டு உதவுகிறது.[2]
கிறிஸ்து சகாப்தம் துவங்கிய பின்னரும், கிழக்கு மேற்கு தொடர்புகள் நீடித்தன. அலக்ஸாந்திரியாவிலும், ஏடனிலும் செல்வம் கொழித்தது. அங்கே அராபியக் குடியேற்றங்கள் பல எழுந்தன. தமிழகத்தில் இருந்து ரோமப் பேரரசு கிளாடியஸ் சீஸர் அவைக்கு அரசியல் தூதுக்குழு வந்ததை கி.பி. 41ல் பிளினி குறித்துள்ளார்.[3]
பருவக்காற்றுகளின் தன்மைகளை விரிவாக ஆராய்ந்து அறிந்த எகிப்திய மாலுமியான உறிப்பாலஸ் கி பி. 45-ல் அரபிய கடல் பயணத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தினார்.[4] அதுவரை, ரோம, அராபியக் கப்பல்கள், செங்கடல், பாரசீகக்