பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

ரோஜா இதழ்கள்

“சித்த இருங்கோ மாமா, பால் கறந்திருப்பா தோட்டத்தில், வாங்கிண்டு வந்துடறேன்.”

அவர் முகத்தையே பார்க்காமல் கூறிவிட்டு அவள் பின் கதவைத் திறந்துகொண்டு வெளியே வருகிறாள்.

பசுமையே அற்றுப் போனாற்போன்ற நெட்டைப் பனை மரங்கள்; குட்டிச்சுவர்கள்; குற்றிச் செடிகளுக்கு இடையே பாம்பு இருக்குமோ, கரையான்கள்தாமோ என்று விளங்காத புற்றுகள்.

‘ஓ’வென்று நெஞ்சு துயரத்தைப் பிழிகிறது.

உடனே “சீ என்ன அசட்டுத்தனம்?” என்று கண்களைத் துடைத்துக் கொள்கிறாள்.

கிந்த வீட்டைவிட்டு மாலை நேரங்களில் சினிமாவுக்கோ, கடைவீதிக்கோ என்றேனும் சென்றபோதும்கூட அவனுடன் தான் சென்றிருக்கிறாள். மாம்பாக்கத்தையும், இந்தச் சாவடிக்குப்பத்தையும் பட்டணத்திலிருந்துவரும் நேர்ச் சாலை இணைக்காது போனாலும், இரண்டும் கண்டம்விட்டு கண்டம் அல்லவே? அவளுக்கு வெளியே இறங்கவே கூச்சம் போகவில்லை. அருகில் உள்ள மொட்டைக் கிணற்றிலிருந்து அதிகாலையிலே நீர் கொண்டு வந்துவிடுவாள். எத்தனையோ நாட்களில் அவன் காலையில் வெளியே சென்று, இரவு எட்டுக்கும் எட்டரைக்கும் வந்திருக்கிறான். பகல் முழுவதும் சடேரென்று ஒரு தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டுத் திருப்பம் கண்ட வாழ்வின் புரியாத எதிர்காலத்தை எண்ணிக் கோலங்களை இட்டு இட்டுக் கலைப்பதும், படித்த குப்பைகளையே படிப்பதுமாக ஓர் இருண்ட சிறைக்குள் காலம் கழித்திருக்கிறாளே ஒழிய, கதவைத் திறந்து பார்த்ததில்லை. சற்று அப்பாலுள்ள பள்ளிக்கூடத்துப் பையன்களின் கலகலப்புக் கேட்கும். சில போக்கிரிப் பையன்கள் முற்றத்தில் ஓட்டில் வந்து விழக் கல்லெறிந்ததுகூட உண்டு.

வெளியே நின்று சுற்றுமுற்றும் பார்த்து விழிக்கிறாள் மைத்ரேயி, மாமா உள்ளே உட்கார்ந்திருக்கிறாரே? ஐயோ!

கையிலே நாலணாக்காசு கிடையாது, ரவை இல்லை. சர்க்கரை இல்லை. நெய், முந்திரிப்பருப்பு ஒன்றுமில்லை; சொஜ்ஜி கிளறும் ஆசைதான் அவலமாய் நிற்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/12&oldid=1099604" இலிருந்து மீள்விக்கப்பட்டது