பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

ரோஜா இதழ்கள்

“அண்ணியார் பக்கத்தில்...வாங்க...நான் தோழி இந்தப் பக்கம்..” என்று மறுபக்கம் வடிவு அமர்ந்து கொள்கிறாள்.

எல்லோரும் அமர்ந்து கொண்டான பிறகு, ஒரு அண்ணன் எழுந்து திருமண வாழ்த்துக் கூறுகிறார்.

“தமிழ் குலத்தைத் தரணியில் நிலைநிறுத்த தந்த வரிசையில் புகழார்ந்த பெயரைத் தேடிக்கொண்ட செம்மலே! மொழிக்கும் இனத்துக்கும் மூச்சுள்ளவரைத் தொண்டாற்றும் உறுதி கொண்ட ஊழியனாய் உழைக்கும் உத்தமா! அன்று வள்ளுவரும் வான் புகழ் இளங்கோவும் வள்ளல் சாத்தானும் வந்த பரம்பரையில் எம் உள்ளங்கள் இனிக்க இனிக்க கவிமழை பொழிவிக்கும் தீதறு இளங்கவியே! ஆரியம் என்றொரு மாயையில் மூழ்கி அடிமைகளாய், அபலைகளாய், அல்லலுறு கையில் நேரிய செஞ்சுடராய் ஒளிகாட்டும் எம்முன் ஒளி வீசும் ஏற்ற மிகு நல் விளக்கே! ஈண்டு, எம் தமிழ் இனம் தரணியில் தலை நிமிர்ந்து நிற்க, ஈடெமக்கில்லை என்று பீடு நடை போட, அன்று தமிழன் கண்ட வாழ்வே வாழ்வு என்று மேலோர் இயம்பும் மொழி வழி நின்று, களவு முன்னும் கற்பு பின்னுமென்று கன்னியொருத்தியின் கருத்தைக் கவர்ந்து...” இங்கே சற்றே நிறுத்திஅவர்களைப் பார்க்கையில் ஆரவாரம் மேலிடுகிறது. ஆகா ஆகா என்றும் அற்புதம் அற்புதம் என்றும் புகழ்மொழிகள். அதுவரையிலும் பேதையாய் மூச்சுத்திணர அமர்ந்திருக்கும் மைத்ரேயிக்கு, தன்னைச் சுற்றி இறுக்கியிருந்த பட்டிழைகள் வெடித்து விட்டாற் போலிருக்கிறது. உள்ளெழுச்சி கண்களில் நீரை நிறைக்கிறது. எனினும் தலைகுனிந்து விழுங்கிக் கொள்கிறாள்.

பின்னும் அந்த வாழ்த்துரை தொடர்கிறது. அழகுப் பந்தலுள் ஆங்காங்கே நச்சுமுனை ஊசிகள் அவளுக்கு மட்டும் உறுத்தப் புகுத்தியிருக்கின்றனர். அவனை, அவளுடைய காதலனை, பகை வீட்டிலிருந்து வெற்றி மாலையுடன் பெண்ணணங்கைச் சிறைகொண்டு வந்த வீரன் எனப் பாராட்டிப் புகழ்கின்றனர்.

“எல்லோரும் ஒர் குலம்; எல்லோரும் ஓரினம்; அதுவே தமிழ்க்குலம், தமிழினம்” என்று முழக்குகிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/48&oldid=1099667" இலிருந்து மீள்விக்கப்பட்டது