பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

47

ஒருவழியாகக் கையொலிகள் நீண்டொலிக்க வாழ்த்துரைகள் முடிகின்றன. தனராஜ் எழுந்து நன்றி நவில்கிறான்.

“அண்ணன்மாரே, இளவல்களே, என்னுள்ளம் தழுதழுக்கிறது. உணர்ச்சி மிகுதியினால், என் நா குழைகிறது நன்றி மிகுதியினால், நமது இனம், நமது பண்பாடு, நமது மொழி என்று ஒன்று சேர்ந்து இருக்கும் இக்காலை, இத்திருமண வாழ்த்தையும் விருந்தையும் என் கண்ணினுமினிய அண்ணன் கண்ணபிரான் ஏற்பாடு செய்தது; நான் எதிர்பாராதது. நாம் ஆண்டாண்டுக் காலமாய் ஒரு அந்நியனுக்கு மட்டுமில்லை நம் நாட்டிலேயே நம்மை அடிமைகொண்டு நம்மீது ஆதிக்கம் செலுத்திய ஒரு மாயைக்குக் கட்டுப்பட்டிருந்தோம். நமக்குள்ள ஆற்றலெல்லாம் எளிய கிராமங்களிலும், மூலை முடுக்குகளிலும், முடிவெட்டும் குடில்களிலும் உடை தைக்கும் ஒத்தைக் கடைகளிலும் சிதறிக் கிடக்கின்றன.

துளிகளெல்லாம் ஒன்று சேர்வோம். நம் தளபதிகள் ஜனநாயக முறையிலே எதிர்த்துப் போராடுவோம் என்று முழக்கி இருக்கின்றனர். அதை இந்தத் தமிழகமெங்கும் பரவச் செய்யும் ஆற்றல் உங்கள் ஒவ்வொருவரிடமும் என்னிடமும் இருக்கிறது, என்று நான் உணருகிறேன். சாதியுடன் நாம் தொடுக்கும் போரில் அடையும் வெற்றியாக இந்தக் கலப்பு மணத்தைக் கொள்வதாகச் சற்றுமுன் கூறிய அண்ணன் பெருமிதம் கொள்ளச் செய்தார் என்னை. இங்குள்ள இளவல்கள் இதை இதயத்தில் வைத்துக்கொள்ளட்டும்..”

மைத்ரேயி செவிகளைப் பொத்திக் கொள்கிறாள்.

பாயசமும் வடையும் கறிகட்டுப் பச்சடியும் அவளுக்கு விருந்தாக இல்லை.


4

"அண்ணி ஏன் சுணக்கமாவே இருக்கு ?”

வெற்றிலை வாயுடன் வடிவு, பிரமை பிடித்தாற்போல் உட்கார்ந்திருக்கும் மைத்ரேயியிடம் வருகிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/49&oldid=1099669" இலிருந்து மீள்விக்கப்பட்டது