பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

வனதேவியின் மைந்தர்கள்



3

பட்டு வணிகர் குட்டையாக, கறுத்த நிறமுடையவராக இருக்கிறார். கூர்த்த நாசியில்லை. முகத்தை நன்கு மசித்துக் கொண்டு, நெற்றியில் செஞ்சந்தனம் தரித்திருக்கிறார். மேனியில் பாலாடை வண்ணத்தில் மெல்லிய அங்கி அணிந்து தார்பாய்ச்சிய ஆடையும் அணிந்துள்ளார். கழுத்தில், உருத்திராட்சமும், தங்கமும் முத்தும் இசைந்த மாலைகளை அணிந்திருக்கிறார். தலைப்பாகையை ஓர் அடிமை வைத்திருக்கிறான்.

“மகாராணிக்கு மங்களம்!” என்று அவளை வணங்குகிறார், அந்த முதிய வணிகர்.

நாலைந்து அடிமைகள், பொதிகளை இறக்குவதற்கு விமலையும் சாமளியும் பாய்களை விரிக்கின்றனர். உயர்ந்த வேலைப்பாடு செய்த பூம்பட்டு மெத்தை இருக்கையை மகாராணிக்கு இடுகின்றனர்.

அவள் அமரும்போது, வணிகருக்கும் ஓர் இருக்கையை இடுகின்றனர். மூட்டைகளைப் பிரித்து, அவர்கள் கடை பரப்புகிறார்கள்.

ஆகா! என்ன நேர்த்தியான நெசவு! மென்மை ... பளபளப்பு ... கடல் நீலம், கிளிப்பச்சை, அந்தி வானம், மாந்தளிர்... என்று பல பல வண்ணங்கள் கண்களைக் கொள்ளை கொள்கின்றன. ஆடைகளின் சருகுகளில், முந்திகளில், எத்துணை வண்ணக் கோலங்கள்! பூங்கொத்துகள், அன்னபட்சிகள், சங்குகள், கொடியோடும் மலர்ச்செண்டுகள், இவை பட்டு நெசவா, சரிகை இழைகளா? இவற்றை உருவாக்கிய கலைஞர் மானுடர்தாமா?

கண்ணிமைக்கவும் மறந்து அந்தக் கண்காட்சியில் சொக்கி நிற்கின்றனர்.

“இவ்வளவு நேர்த்தியாக நெய்யும் சாலியர், வேதபுரிக்காரர்களா? காசியா?..”

அவந்திகாதான் அந்த பிரமிப்பைச் சலனப்படுத்துகிறாள்.