பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

39

படலாம் அல்லவா? ஏன் எனில், அரசர்கள், கூடித்திரியர்கள் பல பெண்களைத் தொட்டுக் கன்னிமை குலைக்கலாம். இது மன்னர் குலத்துக்குப் பெருமையும்கூட அவர் தந்தையைப் போல் இருக்கமாட்டார், இல்லை என்று நம்புகிறோம். ஆனாலும் விருப்பம் தெரிவிக்காத பெண்களை குலைத்து, ஒதுக்குவதும், விருப்பம் தெரிவித்த பெண்களை மானபங்கம் செய்வதும் ஏறக்குறைய ஒரே மாதிரிதானே?...”

அவந்திகா உறுத்துப் பார்க்கிறாள்.

“நீங்கள் என்ன சொல்கிறீர்கள் தேவி?. எப்படி இருந்தாலும், அரக்கர் குலத்தில் பிறந்தாலும், அந்தண குலத்தில் பிறந்தாலும், மன்னர் குலத்தில் பிறந்தாலும் பெண் ஒரு போகத்துக்குரிய பண்டம் தானே? ஆண்கள் முகர்ந்து பார்ப்பதில்தான் பெண் நிறைவடைகிறாள். ஒரு தாயாகும் பேறு கிடைக்கிறது. கணிகையரும், விலை மகளிரும் ஆடவர்களின் இச்சைகளை நிறைவேற்றுவதற்காகவே, பல வித்தைகளைக் கற்றிருந்தாலும், ஒரு மகவு தன் மார்பில் பாலருந்தித் தன்னைப் பிறந்த நேரத்தின் பயனை அதுபவிக்கச் செய்யும் பேறில் அல்லவோ வாழ்கிறார்கள்?. அந்தப்புரங்களில் ஒழுங்கற்ற நாற்றுகள் என்றால், கணிகையர், விலைமகளிர், கரும்பைப் பிழிந்து உறிஞ்சிச் சக்கையாக எறிவதுபோல் அல்லவோ துப்பப்படுகின்றனர்? மகளே, வேதபுரியின் கணிகையர் வீதிகளின் முகப்பில், சத்திரங்களில் அப்படித் துப்பப் பெற்ற மூதாட்டிகளை நான் இளம் பருவத்தில் பார்த்ததுண்டு. கணிகை வீட்டு அடிமையாக என்னை விலை கொடுத்து வாங்க எவரும் வரவில்லை. என் தாய், என்னை அரண்மனைப் பணிக்கு விற்றாள்...”

அவந்திகாவின் கண்ணிரை பூமகள் துடைக்கிறாள்.

“தாயே, இந்தத் துன்பமான கதைகள் வேண்டாம்... விமலையைக் கூப்பிடு. அவள் ஏதேனும் பாட்டுப் பாடட்டும்...”

பூமகள் திரும்பிக் கண்களை மூடிக் கொள்கிறாள். மாலைப் பொழுது இறங்கும் நேரம். யார் யாழ் மீட்டுகிறார்கள் என்று தெரியவில்லை.