பக்கம்:வைணமும் தமிழும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

வைணவமும் தமிழும்


(ஊ) கார்நாற்பது : இந்நூலை இயற்றியவர் கண்ணங் கூத்தனார் என்ற நல்லிசைப்புலவர்.

பொருகடல் வண்ணன் புனைமார்பின் தார்போல்
திருவில் விலங்கூன்றித் தீம்பெயல் தாழ
வருதும் என மொழிந்தார் வாரார்கொல் வானம்
கருவிருந் தாலிக்கும் போழ்து (1)

என்பது முதற்பாடல். தோழி தலைமகட்குப் பருவம் காட்டி வற்புறுத்தும் துறையில் அமைந்தது. கடலின் நிறத்தையுடைய திருமால் திருமார்பில் அணிந்த பூமாலைபோல் இந்திரவில்லைக் குறுக்காக நிறுத்தி இனிய மழை பெய்யும்போது (கார்காலத்தில்) தாம் வருவதாகக் கூறிச் சென்றார் என்று தலைவி தோழிக்குக் கூறுகின்றாள்.

(எ) இனியவை நாற்பது: இதனை இயற்றிய நல்லிசைப் புலவர் பூதம்சேந்தனார் என்பவர். மும்மூர்த்திகளையும் குறிப்பிடும் பாடல் கடவுள் வாழ்த்தாக வந்துள்ளது.

கண்மூன் றுடையான்தாள் சேர்தல் கடிதினிதே;
தொல்மாண் துழாய்மாலை யானைத் தொழலினிதே;
முந்துறப் பேணி முந்நான் குடையானைச்
சென்றமர்ந் தேத்தல் இனிது.

என்பது காப்புச் செய்யுள் சேர்த்தல், ஏத்தல், தொழுதல் என மனம், வாக்கு, காயம் என்னும் திரிகரணவழிபாடு கூறினார். தொல்மாண்துழாய் மாலையான் என்பவன் திருமால்

(ஏ) ஐந்திணை ஐம்பது : திணைக்குப்பத்தாக ஐம்பது பாடல்களைக் கொண்ட இந்த நூல் அகப்பொருட் பனுவல், இயற்றியவர் மாறன் பொறையனார், முல்லைத்திணையைத் தொடங்கும் முதற் பாடல் இது.