பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுராவின் வைணவ புராணங்கள்


நம்முடைய புராண மரபில் மக்களுக்கும் பிராணிகளுக்கும் தாவரங்களுக்கும் வேறுபாடு இல்லை. மதுரையில் இறைவன் பன்றிக் குட்டிகளுக்கு முலை கொடுக்கிறான், நரிக்குருவி முதலியன முக்தி பெறுகின்றன. தில்லையில் உமாபதி சிவம் முள்ளிச் செடிக்கு முக்தி நல்குகிறார். திருவோத்துாரில் இருந்த ஆண் பனைகள் ஞானசம்பந்தரால் பெண் பனையாக்கப் பெறுகின்றன.இந்தப்புராணக் கூற்றுகள் மனிதகுலத்திற்கும் உய்தி உண்டு என்று உணர்த்தத்தடை இல்லை.இந்த நம்பிக்கையினால் மக்கள் துன்பத்தில் ஆழ்ந்து விடாமல் ஊக்கத்துடன் செயல்படுகின்றனர்.

சிவபெருமான் இறையனார் என்ற புலவர் வடிவில் சங்கத்தில் அமர்ந்திருந்தார். கந்தர பாண்டியனாக உருவந்தாங்கி வந்து தமிழ்நாட்டில் மதுரை மாநகரில் ஆட்சி புரிந்தார் என்பன போன்ற கதைகளும் சேர்ந்து தமிழுக்கும் இறைவனுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பை உண்டு பண்ணின. காஞ்சியில் திருவெஃகா என்ற தலத்தில் நகரைவிட்டு நீங்கிய 'கணிகண்ணன்' என்ற புலவன் பின்னே பச்சைப் பசுங்கொண்டலான திருமால் தம் பைந்நாகப் பாய் சுருட்டிக்கொண்டு செல்லுகின்றார். திருப்பரங்குன்றில் முருகன் திருமுருகாற்றுப் படைக்கு மகிழ்ந்து நக்கீரருக்கு சிறை வீடு செய்கின்றார்.இவ்வாறெல்லாம் தல வரலாற்றுச்செய்திகள் இறைவன் தமிழுக்கும் பக்திக்கும் ஒளி தந்த நிலைகளையுணர்த்தி மக்களுக்கு இறையருளில் நம்பிக்கையை ஊட்டியுள்ளன.

இவையே புராணங்களின் நிலை. இவை பிற்காலத்தில் தமிழ் இலக்கியத்தில் பெரும் பகுதியாய் அமைந்துள்ளன. தமிழ் வளர்ச்சியில் எத்தனையோ நிலைகள். அவற்றுள் புராணம் மிக்க சிறப்புடையது.

16