பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வாழ கந்தன் அருள்க!

மதிப்பிற்குரிய
    மருத காசியார்
மூதறிவாளர்;
    முத்தமிழ்க் கவிஞர்!
நதிப்புன லொழுக்காய்
    நற்றமிழ் நடையில்
நல்ல பனுவல்கள்
    நாளும் யாத்தவர்!

எளிய சந்தமும்
    எழுச்சிப் பொருளும்
இணைந்த பாடல்
    இவரது பாடல்:
எளியேன் போன்றோர்
    இசைக்குப் பாடல்
எழுதுதற் கிவரே
    இலக்கண மானார்!

பணமும் புகழும்
    படைத்த நாட்களில்
பொறையைப் பேணும்
    நிறைகுட மானவர்;
குணத்தில் சிறிதும்
    கோதிலாச் செம்மல்;
குழந்தை மனத்தைக்
    கொண்ட இப் பெரியார்!