பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

"விவசாயி! விவசாயி!
கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி! விவசாயி!"

என்பன போன்ற பாடல்களும் அன்று காடுகரையெல்லாம். எதிரொலித்து மணமூட்டின, ஏன்? இன்றும் தான்!

"அந்தப் பாடலாசிரியரைச் சந்திக்கும் வாய்ப்பு வருமா?" என்று கூட ஏங்கியிருந்தேன். ஆனால் அந்த வாய்ப்பு என்னையுமறியாமல் ஒரு நாள் திடீரென்று எனக்குக் கிடைத்தது. 1965-ம் ஆண்டு என்ற நினைவு. என் நண்பர் ஒருவருடன், திரைப்பட நடிகர் V. K. ராமசாமி அவர்கள் இல்லத்திற்குச் செல்கின்றேன், இரவு நேரம். திரு V. K. R. உடன் இன்னொரு பெரியவரும் பேசிக் கொண்டிருக்கிறார். அழைத்துச் சென்ற நண்பர் திரு V.K.R அவர்களுக்கு என்னை அறிமுகப்படுத்துகிறார். அந்த நொடியே அவர் அருகில் அமர்ந்திருந்த பெரியவர், திடுமென எழுந்து என் கரங்களை சகோதர பாசத்தோடு, உரிமையோடு பற்றிக் கொண்டு உறவு கொண்டாடி நலம் விழைகிறார். முன் பின் அறியாத இளைஞனாகிய என்னை, அத்துணை பாசத்தோடு அரவணைத்துப் பாராட்டத் தொடங்கிய அவர்தான் பெருங் கவிஞர் மருதகாசி என்று அறிந்து, திகைத்துப் போய் விடுகின்றேன். அந்தக் கவிதைப் பெருமகனின் பணிவு, இன்னும் என்னுள் பசுமையாக நிழலாடிக் கொண்டிருக்கின்றது. ஏறக்குறைய 4000 பாடல்களை அரிய கவிதை இலக்கியச் சொத்தாக வழங்கி இருக்கின்ற அவரின் ஆற்றலால் தமிழ்க் கவிதை உலகம் தலை நிமிர்ந்து நிற்கிறது. இன்னிசைத் துணையோடு எதிரொலித்து வரும் அந்தப் படைப்புகளெல்லாம் நூல் வடிவம் பெறவில்லையே என்று ஏங்கிக் கிடந்த, எண்ணற்றவர்களில் நானும் ஒருவன். திரைப்படப் பாடல்களை மக்கள் இலக்கியமாக ஆக்குவதில் முயன்று வெற்றி கண்டவர்களில், குறிப்பிடத் தகுந்தவர் அண்ணன் மருதகாசி அவர்கள்.