பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158


பெண்: பொங்கிவரும் காவிரியே எங்களது தாயே!
கங்கையினும் மேலான கன்னித்தெய்வம் நீயே!
ஆண் : மங்கையரின் முகத்தழகு மஞ்சள் பூச்சினாலே!
மாநிலத்தின் அழகுனது வண்டல் பாய்ச்சலாலே!
பெண்: அங்கமெல்லாம் அலைபுரள அசைந்து வரும் பாவை !
செங்கரும்பு பயிர்வளரச் செய்வதும் உன்சேவை!
ஆண் : மாலையிட்ட மங்கையர்கள் தாலி பெருக்கிப் படைப்பார்!
மணவாளன் கைபிடித்து சிரித்தபடி நடப்பார்!
பெண்: வாளையைப்போல் காளையர்கள் தாவித் தாவிக் குதிப்பார்!
மனங் கவரும் கன்னியர்மேல் நீரை வாரி இறைப்பார்!
பெண்: மலை முடியில் பிறந்ததனால் மலைமகளும் நீயே!
அலைகடலில் கலந்ததனால் அலைமகளும் நீயே!
ஆண் : சலசலக்கும் ஒசையிலே ஏழுசுரம் தந்தாயே!
பெண்: தமிழ் முழக்கம் செய்வதனால் கலைமகளும் நீயே!
பொன்னித்திருநாள்-1960
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள்: T. M. செளந்தரராஜன் & P. சுசிலா