பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

பத்தை கவனிக்க வேண்டிய நிலை. குடந்தையில் இருந்த காலத்தில் பல நாடக நடிகர்களுடனும், நாடகக் குழுக்களுடனும் நெருங்கிப் பழகியவன். அவன் இசைக்காக எழுதிய முதற்பாடலே, அன்றும் இன்றும் அவன் "சங்கீத தேவதை"யாக ஆராதனை செய்து வரும் திருமதி. M. S. சுப்புலட்சுமி அவர்கள், கிராமபோன் ரெக்கார்டில் பாடியுள்ள "குக சரவணபவ சிவபாலா" என்ற மெட்டில் எழுதிய "கலைமகள் உறைந்திடும் கலாசாலை" என்று தொடங்கும் பாடலாகும்.

ஊரில் விவசாய வேலையோடு கிராம அதிகாரி வேலையையும் பார்த்து வந்தான். அந்த நேரத்தில், அவனுக்கு முன்பே பரிச்சயமாயிருந்த K. N. ரத்தினம் அவர்களின், தேவி நாடக சபைக்குப் பாட்டு எழுதித் தர நண்பர் ஸ்ரீராமுலு நாயுடு என்பவரின் மூலம் அழைப்பு வந்தது. அவர்கள் அப்பொழுது முன்னாள் முதல்வர் டாக்டர். கலைஞர் அவர்களின் நாடகமான "மந்திரி குமாரி" நாடகத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். அதில், கலைஞர் அவர்களின் எழுத்துக்கள் இன்னும் எத்தனை நூற்றாண்டானாலும், நிலைத்திருக்கக் கூடியவை. அங்கு அரங்கேற்றிய புலவர் A. K. வேலன் எழுதிய "சூறாவளி" என்ற நாடகத்திற்குத்தான் முதல் முதல் பாடல் எழுதினான். அங்குதான் கா. மு. ஷெரீப் அவர்களின் நட்பு ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து "ஒரே முத்தம்" "பராசக்தி" போன்ற நாடகங்களுக்குப் பாடல் எழுதி விட்டு, நடிகனாகவும் மாறி, கம்பெனியுடன் செல்ல வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.

காரைக்குடி முகாமில், அரு. ராமனாதன் எழுதிய "வானவில்" என்ற நாடகத்திற்கு, திருச்சி லோகநாதன் அவர்கள் கொடுத்த மெட்டுகளுக்குப் பாடல் எழுதினான். கா. மு. ஷெரீப் அவர்கள் "பெண்" என்ற நாடகத்திற்குப் பாடல் எழுதினார்.

கம்பெனி தஞ்சையில், அடுத்து முகாமிட்டது. அப்பொழுது, சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் இருந்து