பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53


முத்தே! பவளமே! முக்கனியே! சர்க்கரையே!
கொத்து மருக்கொழுந்தே! கோமளமே கண்வளராய்!

ஆளப்பிறந்த என் கண்மணியே!-எந்தன்
ஆசையைக் கேளடா விண்மணியே!
நாளொரு மேனியும் நீ வளர்ந்தே!-கலை
ஞானத்தில் தேர்ந்திட வேண்டுமடா!
சீலம் மிகுந்தே எந்நாளும்! மக்கள்
சிந்தையில் நிலைபெற வேண்டுமடா!

ஏழையென் வீட்டுக்கு வந்தவனே!-இணை
இல்லாத ஆனந்தம் தந்தவனே!
வாழைக்குருத்தென நீ வளர்ந்தே-ஒரு
வல்லவனாகிட வேண்டுமடா!
வாழப் பிறந்த கண்மணியே! சொல்லும்
வார்த்தையைக் கேளடா பொன்மணியே!

பிள்ளைக் கலிதீர்த்த தெள்ளமுதே! உந்தன்
சொல்லே ஆணையாக வேண்டுமடா! எந்தன்
உள்ளங்குளிர இம்மண் மேலே-எல்லை
இல்லாப் புகழ் தேட வேண்டுமடா!