பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

இவர் சென்னைக் கம்பன் கழகச் செயலராக இருந்து நடத்தி வரும் விழாக்களின் சிறப்பைச் சென்னை நகர் கம்பன் சுவைஞர்களும் பிற இடங்களிலுள்ள கம்பன் பக்தர்களும் நன்கு அறிவர். அடியேன் காரைக்குடியில் வள்ளல் அழகப்பர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி காலம் முதல் (1950 முதல்) இவர்தம் தந்தையார் பழநியப்பச் செட்டியாரை நன்கு அறிவேன். அவர்தம் ஒரே மகன், நம்மிடையே உள்ள இந்தப் பழ. பழநியப்பன். பள்ளியில் படிக்கும்போது நான் இவரிடம் கண்ட துடிப்பும் சுறுசுறுப்பும் இன்னும் குறையாமல் இருந்து வருவதைக் கண்டு மகிழ்பவன்; பெருமை கொள்பவன். இந்தக் கம்பன் அடிசூடியின் அணிந்துரை இந்நூலை அணி செய்வது இந்நூலின் பேறு; அடியேனின் பேறுங்கூட.

நீதியரசர் டாக்டர் மு.மு.இஸ்மாயீல் உயர்குணச் செம்மல். மேலிடத்தின் கருத்து வேறுபாட்டின் காரணமாகத் தலைமை நீதிபதிப் பதவியைத் துச்சமாக எண்ணி உதறித் தள்ளிச் 'சித்திரத்தின் அன்றலர்ந்த செந்தாமரை முகத்துடன் திகழும் குணப்பெருமகனார். கடந்த ஐம்பதாண்டுகட்குமேல் கம்பன் காவியத்தில் உள்ளத்தைப் பறிகொடுத்த சுவைஞர் மாமணி, இவர் சென்னைக் கம்பன் கழகம் கண்டு, அதன் தலைவராக இருந்துகொண்டு, விழாக்களைச் சீரும் சிறப்புமாக நடத்தி வருபவர். தவிர, மாவட்டந்தோறும் கம்பன் கழகங்கள் அமைய முதற்காரணமாக இருந்து, அவை சிறப்புடன் இயங்கிவரக் கண்காணித்து வருபவர். அடியேன் திருப்பதியிலிருந்த காலம் (1960-77) முதல் இவரை நன்கு அறிவேன்; சென்னையில் குடியேறிய பிறகு (1978 சனவரி முதல்) இவரிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்புகள் பெற்றவன். எல்லோரிடமும் இன்முகத்துடன், சமயக் காழ்ப்பற்று மனித நேயத்துடன் பழகிவரும் டாக்டர் ஜஸ்டிஸ் அவர்கட்கு இந்நூலை அன்புப் படையலாக்கிப் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்; இதனைப் பெரும் பேறாகவும் கருதுகின்றேன்.

அடியேனுக்கு எல்லா நலன்களையும் ஈந்து, உடல் நலத்துடனும் மனவளத்துடனும் வாழ அருள் சுரந்து, எட்டெழுத்து மந்திரம் போல் எட்டு இயல்களாக அமைந்த இந்நூல் எழுதவும் வெளிவரவும் நிமித்த காரணமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/11&oldid=1509135" இலிருந்து மீள்விக்கப்பட்டது