பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152 அண்ணல் அநுமன்

புகலடைந்து அலக்கண் நீங்கி அரசும் பெறலாம் என்று வந்தவன், வீடணன். ஆகவே, இவன் வந்தது தக்கதே யாகும். (92)

(ஊ) நீதி நெறி தவறிய அரக்கர்கட்கு அரசு நிலை நில்லாதென்பதையும், தம்பியர் விஷயத்தில் கருணை வைக்கும் தன்மையுடன் உண்மைக்குப் பாடுபடுந் தன்மையையும் கண்டு விரும்பி வந்தவன், வீடணன். (93)

(எ) இந்த வீடணன் தன் தமையனை விட்டு நம்மை வந்தடைந்த காலம் தக்க காலமன்று என்று கருதுவார்க ளாயின் அது சரியன்று; வாலி என்கின்ற தனது பெரும் பகைவனின் வலியை இராமன் தொலைத்துவிட்டதால், இனி இவ்விடத்து இந்த இராவணனுக்கு நாசம் பொருந்தும் என்று கருதி நீ மூலப் பொருளாகுவை என்ற உணர்ச்சி தோன்றத் தன் தமையனை விட்டுப் பிரிந்து உம்மை அடைந்திட்டான். ஆகவே, இவன் வந்த காலம் ஏற்ற காலமேயாகும் (94);

(ஏ) அந்த அரக்கர், மாயத்தை அறிந்தவராயிருப்பது நமக்கு நன்மையேயாகும். பாம்பின கால் பாம்பறியும்' என்றபடி இந்த வீடணன் அரக்கர் சாதியிற் பிறந்தவராதலால், அரக்கர் ஏதேனும் மாயம் செய்தால் அதனை அறிந்து கூறுவர்; அன்றியும், ஏதாவது அவர் செய்வதற்கு மாறாக மாயம் செய்ய வேண்டுமென்றாலும் செய்வர்; இதன் வழியாக நன்மையே நமக்கு விளையும் (95);

(ஐ) இந்த அரக்கருடைய மனத்திலுள்ள தீமையைச் செவ்வனே அறிதல் அருமையானது; இவர் நாம் இறக்கக்கூடிய செயலைச் செய்வர் என்று கருதுதலைச் சிலர் செய்யக்கூடும். வலிய பகைவரிடத்துச் சங்கிப்பது போல எளிமைப்பட்டு வந்துள்ள இவரிடத்துச் சங்கிக்க இடம் இல்லை (96);

(ஒ) நான் பிராட்டியைக் காண இலங்கைக்குச் சென்றிருந்த பொழுது இவனைக் கொல்லுமின் என்று இராவணன் சொன்னபோது தூதுவரைக் கொல்லுவது என்பது இழிவைத் தருவது; அச்செயல் பழியுடனும் பொருந்தும், பின்னும் போர்த்தொழில் வெல்லலம், என்று சொல்லித் தக்க வேளையில் தடுத்தான், இந்த வீடணன் (97);

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/153&oldid=1361344" இலிருந்து மீள்விக்கப்பட்டது