பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

211




முற்காலத்தில் பெற்றோர்களும், ஆசிரியர்களும், விளையாட்டுக்களானது மாணவர்களது நேரத்தை மட்டும் வீணாக்காமல், வாழ்க்கையையே பாழடிக்கும் செயல் என்று பேசினார்கள். மாணவர்கள் விளையாட்டுக்களில் ஈடுபடுவதை தடை செய்தார்கள். அதனால், மாணவர்கள் விளையாடுகிற வாய்ப்புக்களை இழந்தனர். மகிழும் சூழ்நிலைகளையும் இழந்தனர்.

இன்று, உளநூல் அறிஞர்கள் கூறிய காரண காரியங்களை கேட்டுத் தெளிந்த காரணத்தால், கல்வித் துறையில் விளையாட்டுக்கு முக்கியமான இடத்தைக் கொடுத்தனர் அரசியல் தலைவர்கள். கல்விக் கொள்கையிலேயே தலை சிறந்த பகுதியாக, இன்று விளையாட்டுத் துறை விளங்குவதே அதன் சிறப்புக்கு அற்புதமான சான்றாக அமைந்திருக்கிறது.

விளையாட்டும் கல்வியும்

உடலும் மனமும் ஒருங்கிணைந்தே செயல்படுகின்றன. இரண்டும் வேறல்ல. ஒன்றுக்கொன்று ஒன்றை யொன்று சார்ந்தே இருக்கின்றன.நலமான உடலில் தான் நலமான மனம் இருக்கும் என்ற கருத்தையும் இங்கு நாம் நினைவு கூர்வோம்.

நலமான உடல் நலமான மனதை வளர்த்து விடுவது போலவே, நலமான மனமும் நலமான உடலை வளர்த்து, உதவிக் கொள்கிறது.

அதுபோலவே, கல்வியும் ஒரு மனிதரது தோரணையை வளர்த்து, அவரது நடத்தைகளையும் நல்ல முறையில் பண்படுத்தி வைக்கிறது.நான்கு கூறுகளாக ஒரு மனிதரது தோரணை நிறைவு பெறுகிறது.