பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

71



உதாரணமாக, உண்மை பேசுதல் என்பது சமுதாயத்தின் சிறந்த எதிர்பார்ப்பாகும். இது நம்பிக்கை வழியாக, பரம்பரை பரம்பரையாகத் தொடர்ந்து வரும் மேன்மையான கொள்கையாகும்.

பூமி உருண்டை வடிவமானது. அதற்கு ஈர்ப்பு சக்தி உண்டு. காற்றிரண்டு ஒன்று சேர்ந்து நீராகியது என்பன போன்ற கருத்துக்கள் பல உண்டு. கலிலியோ, நியூடன் எய்ன்ஸ்டீன் போன்ற அறிவியல் வல்லுநர்கள் பலர், கொடுத்த ஆய்வுக் கொள்கைகள் இவை என்று நாம் இங்கே அறிந்து கொள்ளலாம்.

இப்படிப்பட்ட கொள்கைகள் யாவும், அறிவை வளர்க்கப் பயன்படுவதுடன், வாழ்வை வசதியாகவும் அமைதியாகவும் அனுபவித்து வாழ்ந்து செல்ல, ஆழ்ந்த துணையாகவும் உள்ளன.

காலத்திற்குக் காலம் கொள்கைகள் மாறும் என்பார்கள். புதியன புகுதலும், பழையன கழிதலும் என்றும் கூறுவார்கள். கொள்கைகளில் மாற்றம் இருக்குமே தவிர, அடிப்படை கருத்து மட்டும் மாறாது என்றும் உரைப்பார்கள். அதுதான் உண்மை.

காலத்திற்கேற்ப, கொள்கைகளில் புதுமை சேர்ந்து கொண்டு, இதமான பாதையை அமைத்துக் கொள்ளும் என்பதுதான் காலத்தின் கட்டளை.

ஆக, கொள்கைகள் என்பவை, ஆழ்ந்த அறிவின் முதிர்ச்சி காரணமாகவும்.அப்பட்டமான நம்பிக்கையின் எழுச்சி காரணமாகவும் தோன்றுகின்றன என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள்.