பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு போட முற்பட்டு என் குறையறிவைப்பறை சாற்றிக் கொள்ள விரும்பவில்லை. பிள்ளையவர்கள் உரையாசிரியராவதற்குத் தம்மைப் பண்படுத்திக் கொள்ளும் முயற்சியில் முனைந்திருந்த காலத்தில் மாணவனாக அவரோடு உடனிருக்கும் வாய்ப்புப் பெற்றிருந்ததால், அதற்காக இவர் மேற்கொண்ட உழைப்பையும், உரை கண்ட சிறப்பையும் மட்டும் அறிந்தவாறு அமைவேன். உரையாசிரியப் பண்பு பிள்ளையவர்கட்குக் கருவிலே வாய்த்த திரு. அதற்கான இயல்பூக்கம் உரம் பெற வளர்ந்து, அவர் புலவரானதும் திறம்பெறச் செயல்படத் தொடங்கியது. அதன் பயனாக அவர் பழந்தமிழ் இலக்கிய இலக்கண உரைகளிடம் அடங்கா ஆர்வமும், அவற்றை ஆக்கிய ஆசிரியர்களிடம் ஆழ்ந்த பற்றும், அளவற்ற மதிப்பும் உடையவரானார். இலக்கிய நூலாயினும் இலக்கண நூலாயினும் அதன் பண்டை உரைகளை ஆழ்ந்து பயின்று, தோய்ந்து நுகர்ந்து, ஆய்ந்து தெளிந்தார். அவ்வுரையாசிரியர்கள் நூல்களை அணுகும் முறை உரைகாணும் நெறி, உரை வகுக்கும் திறம் ஆகியவற்றை அறிந்தார். பிறர் கருத்தோடோ தம் கருத்தோடோ மாறுபட அமைந்திருக்கும் உரையை உடனே பிழையுரை என்று முடிவு செய்து விடாமல், அவர் அவ்வாறு உரைவகுத்திருப்பதற்குரிய காரணத்தைக் கண்டறிந்தார். அக்காரணம் அவ்வாசிரியர் காலத்திற் மட்டுமன்றிப் பொதுவாக எக்காலத்திற்கும், சிறப்பாக இக்கால வழக்குக்கும் பொருந்தாததாயின் பொருத்தமான புத்துரை காண முயன்றார். முன்னோரின் ஆய்வுரைகளைக் காய்தல், உவத்தலின்றி நடு நின்று நெடிது ஆராய்ந்தார். இலக்கிய இலக்கண உரைகளை அன்றிச் சிவஞானபோதம், மாபாடியம் போன்ற சமயச் சார்பான சரித்திரப்பேருரைகளையும் பலமுறை படித்துத் தெளிவுற விளக்கம் கண்டார். நாலாயிரத் திவ்வியப் பிரபந்த வியாக்கியானங்களை மரபறிந்த வடமொழி வல்லுநரின் துணை கொண்டு விரும்பிப் பயின்றார். அவை பதசாரம் கூறும் முறை அவரை மிகவும் கவர்ந்தது. ஆங்கில மொழியில் உள்ள சட்டங்களையும், அவற்றின் விளக்கங்களையும், அவை பற்றிய அறிஞர்களின் ஆய்வுரைகளையும், நடுவர்களின் முடிவுரை களையும் பெற்றுப் படித்தார்; சட்ட நூற் புலவர்களும், நீதிமன்ற நடுவர்களும் சட்டவிதிகட்கு விளக்கம் காணும் முறையையும் நடுவர்கள் முடிவு கூறும் திறனையும் தெளிவு பெற அறிந்தார். வெவ்வேறு சமயச் செய்திகளை அவ்வச்சமய அறிஞர்களை அடுத்துக்கேட்டு அறிந்து கொண்டார். வரலாற்று ஆசிரியர்கள் ஆராய்ச்சியாளர்களின் நூல்களையும், கல்வெட்டுக்களையும், அவை பற்றிய விளக்க நூல்களையும் பெற்றுப் படித்து ஆராய்ந்து, தமிழ் இலக்கியங்களில் இடம் பெறும், வரலாற்றுச்